கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க, பொது இடங்களுக்குச் செல்லும் போது தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும். இந்த விதிமுறைகள் நாடு முழுவதும் அமலில் உள்ளது.
இந்தநிலையில் தற்போது சென்னையில் முகக்கவசம் அணியாதவர்கள், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி முதல் இன்று வரை 4 ஆயிரத்து 214 பேர் மீது கொரோனா விதிமுறை மீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அபராதமாக மொத்தம் 7 லட்சத்து 73 ஆயிரத்து 800 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தவர்கள் 4 ஆயிரத்து 113 பேரும் மற்றும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள் என 101 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கொரோனா விதிமுறையை மீறியவர்கள் என முக கவசம் அணியாமல் வந்த, 474 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு அதற்கு வசூல் செய்யப்பட்ட அபராதம் 94 ஆயிரத்து, 800 ரூபாய் ஆகும்.
மேலும், பொது இடங்களில் எச்சில் துப்பியதற்கு 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இதற்கு மொத்தம் 8,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது,எனவே மொத்தம், 491 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மொத்தம் ஒரு லட்சத்து, 3,300 ரூபாய் அபராதம், வசூல் செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்த அரசு பொதுமக்களுக்கு கொரோனா விதிமுறைகளின் அவசியத்தைத் தீவிரமாக உணர்த்தாமல் இவ்வாறு வழக்குப் பதிவு செய்து பணம் வசூல் செய்தால் கொரோனா தொற்று போய்விடுமா என்று சமுக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.