தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை போன்று பிற மாவட்டங்களிலும் அண்மைக் காலங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில், நாளையோடு (ஜூன் 30) சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவடையும் நிலையில், மேலும் இதனை நீட்டிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் மருத்துவக் குழு நிபுணர்கள் ஆலோசனை நடத்தினர்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து மருத்துவக் குழு நிபுணர்கள் பேசியதன் விவரம் பின்வருமாறு:-
“சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை.
ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல: அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை.
மற்ற மாவட்டங்களிலும் சென்னையை போல் சோதனையை அதிகரிக்க வேண்டும். தற்போது சென்னையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா அதிகரித்து வருகிறது.
சென்னையில் பின்பற்றப்படும் நோய்த் தடுப்பு முறைகளை மற்ற நகரங்களிலும் பின்பற்ற வேண்டும். திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் கொரோனா இரட்டிப்பாகும் காலம் குறைந்துவிட்டது.
காய்ச்சல், சுவை உணர்வு இன்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை அவசியம். சென்னையில் கொரோனா அதிகமானாலும் தொற்று இரட்டிப்பாகும் காலம் அதிகரித்துள்ளது.
எப்போதும் பொது முடக்கத்தை நிரந்தரமாக்கி கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சிப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது. பொதுமுடக்கம் நோய் தொற்று இரட்டிப்பாகும் காலத்தை அதிகரித்துள்ளதை மறுக்க முடியாது.
கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் பொது முடக்கத்தை தீவிரமாக்கலாம். பொதுப்போக்குவரத்து காரணமாக சில மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகமாகியுள்ளது. பொதுப்போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும்.” என அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.