கொரோனா பரவல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், ஆளும் அதிமுக அரசோ, பிரதான தடுப்பு நடவடிக்கையான அதிகபடியான பரிசோதனைகளை செய்து தொற்றுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், மாவட்டங்களுக்கும், மண்டலங்களுக்கும் சிறப்பு அதிகாரிகளை மட்டுமே மாற்றி மாற்றி நியமித்து வருகிறது.
ஏற்கெனவே சுகாதாரத்துறையின் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், கொரோனா தடுப்பு பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். கொரோனா தாக்கம் மாநிலத்தில் அதிகரித்த நிலையில், வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் சுகாதாரத்துறை செயலாளராகவும், சென்னை மண்டலத்துக்கான சிறப்பு கொரோனா தடுப்பு அதிகாரியாகவும் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.
பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் ஐ.ஏ.எஸுக்கு பதிலாக பீலா ராஜேஷ் அந்த பதவிக்கு மாற்றப்பட்டார். இப்படி இருக்கையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் நீங்கலாக இதர 33 மாவட்டங்களுக்கான கொரோனா தடுப்பு அதிகாரிகளை நியமித்து தலைமைச்செயலாளர் அறிவித்துள்ளார்.
அந்த 33 பேரில், பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ள பீலா ராஜேஷ் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கான கொரோனா தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே சுகாதாரத்துறை செயலாளராக இருந்தபோது பீலா ராஜேஷுக்கும் சென்னை மாநகராட்சி ஆணையராக இருக்கும் பிரகாஷுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதன் காரணமாகவே பீலா ராஜேஷ் பதவி மாற்றம் செய்யப்பட்டார் எனப் பேசப்பட்டது.
தற்போது பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை செயலாளராக இருக்கும் பீலா ராஜேஷுக்கு மாவட்ட சிறப்பு கொரோனா தடுப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் கொரோனா தடுப்புப் பணிக்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழுக்களின் செயல்பாடுகள் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், தற்போது 33 மாவட்டங்களுக்கான சிறப்பு அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது.
இவ்வாறு அதிகாரிகளை மாற்றியமைப்பதன் மூலம் மட்டுமே கொரோனா பரவல் நின்றுவிடாது என்பது ஏனோ தமிழகத்தின் முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமலேயே உள்ளது என சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் நோக்கர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.