கொரோனா தொற்று தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அ.தி.மு.க அரசின் அலட்சிய நடவடிக்கைகளால் கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் கோயம்பேடு மார்க்கெட் நாளை முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் சிலருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கோயம்பேடு சந்தை நாளை (மே 5) முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.
பொதுமக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களை சென்றடையவும் சென்னை திருமழிசையில் வருகின்ற (மே 7) வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் திருமழிசை காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு வந்து காய்கறிகளை வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்புக்கு மேற்கொள்ளப்படும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.