இந்தியாவில், கொரோனா பாதிப்பு தினசரி அதிகரித்த வண்ணம் உள்ளது. மகாராஷ்டிராவில் 3 ஆயிரத்துக்கும் மேலானோருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தபடியாக டெல்லி, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 1,000க்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக குஜராத் மாநிலம் உள்ளது. அங்கு 929 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. அதில், 73 பேர் குணமடைந்ததில், 36 பேர் பலியாகியுள்ளனர். ஆகவே 820 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இந்து, முஸ்லிம் என பிரித்து வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள பிபிசி தமிழ், கடந்த ஏப்ரல் 12 வரை அனைவருக்கும் ஒரே வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. தற்போது நிலைமை மாறி, இஸ்லாமியர்களுக்கு சி4 வார்டிலும், இந்துக்களுக்கு ஏ4 வார்டிலும் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏ4 வார்டில் உள்ள இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் தங்களுக்கு நிகராக சிகிச்சை பெற்றுக் கொள்வதில் விருப்பமில்லை என மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்ததின் அடிப்படையிலேயே தற்போது இஸ்லாமியர்கள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என முஸ்லிம் கொரோனா நோயாளியின் நண்பர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பேசிய மருத்துவமனை கண்காணிப்பாளார் ரத்தோட், அரசின் வழிகாட்டுதலின்படியே அனைத்தும் நடைபெறுகிறது. நோயாளிகளின் வயது மற்றும் உடல்நிலைக்கு ஏற்ப வார்டுகள் மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வைரஸூக்கு மதம் இனம் தெரியாது எனும், போது அதனை வைத்துக்கொண்டு இவ்வாறு பாகுபாட்டுடன் செயல்படுவது அர்த்தமற்றது என வேதனை தெரிவிக்கப்பட்டு வருகிறது.