ஊரடங்கு உத்தரவு காரணமாக சிரமத்துக்குள்ளாகியுள்ள மக்களுக்கு உணவு, அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை நேரடியாக வழங்க அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்த உத்தரவை எதிர்த்து தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, ஆகிய கட்சிகள் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.
இவ்வாறு வழங்குவது 144 தடை உத்தரவுக்கு எதிரானது எனக் கூறி, சென்னை மாநகராட்சி ஆணையர், மக்களுக்கு நேரடியாக உணவுப் பொருட்களையும், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களையும் வழங்க அரசியல் கட்சிகளுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தார். பின்னர் அந்த உத்தரவில் திருத்தங்கள் செய்து தடை என்பதை கட்டுப்பாடுகளாக மாற்றி உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க உள்ளிட்டோர் சார்பில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. அவர்களது மனுக்களில், பாதிக்கப்பட்டுள்ள விளிம்பு நிலை மக்களுக்கும், தினக்கூலிகளுக்கும் உதவும் வகையில், அவர்களுக்கு உணவு மற்றும் மளிகைப் பொருட்களையும், மருந்துப் பொருட்களையும் வழங்கி வருவதாகவும், அப்போது தனிமனித இடைவெளி பின்பற்றப்படுவதாகவும், முகக் கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தே உதவிகள் வழங்கப்பட்டு வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு புறம் வசதியான மக்களுக்கு ஆன்லைன் மூலம் பொருட்கள் கிடைக்க அனுமதியளித்துள்ள அரசு, ஏழை மக்களுக்கு நேரடியாக உணவுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர்.பொங்கியப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தி.மு.க தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, 130 கோடி மக்களை அரசால் மட்டுமே முழுமையாக அணுக முடியாது என்றும், உதவி வேண்டுபவர்களுக்கு தேவையானவற்றை சக குடிமகன்கள் வழங்க வேண்டுமென பிரதமரே அறிவுறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டி வாதிட்டார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும், அப்படி சென்று வழங்கும்போது கைது நடவடிக்கையும் மேற்கொள்வதாக வாதிட்டார். கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலையும் தாக்கல் செய்தார். கட்சிகளும் தன்னார்வலர்களும் உதவிகளை வழங்கும்போது இரண்டு நாட்களுக்கு முன்பாக உரிய அனுமதி பெற வேண்டும் என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமெனவும், உதவிகள் வழங்குவது குறித்து உள்ளாட்சி அமைப்புகளிடம் தெரிவித்தால் போதுமென திருத்தி அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து அரசு பதிலளிக்க அவகாசம் வழங்கி வழக்கை நாளை ஒத்திவைத்த நீதிபதிகள், நாளைக்கே தீர்ப்பளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.