கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சியில் சுமார் 30 தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கின்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளநிலையில் நகரைச் சுற்றி பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அவர்களுக்கு போதுமான போக்குவரத்து வசதி செய்து தரப்படவில்லை.
அதனால், நகராட்சிக்கு குப்பை அள்ளும் சிறிய லோடு ஆட்டோவில் அவர்கள் அதிகாலையில் அழைத்து வரப்படுகிறார்கள். அதுபோல் மாலையில் கொண்டு விடப்படுகிறார்கள்.
இந்த பயணத்தின்போது போதிய சமூக இடைவெளியை பின்பற்ற முடிவதில்லை என்று பீதியுடன் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஊரடங்கு உத்தரவால் தேனீர் கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருப்பதால் காலையில் வெறும் வயிற்றுடன் பணியைத் தொடங்கும் நிலை.
அம்மா உணவகத்தில் கிடைக்கும் மதிய உணவு மட்டுமே அவர்களுக்கு ஆறுதல். தற்போது வைரஸ் நோய் பரவி வரும் சூழ்நிலையில் தங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் வேண்டுகோளாக உள்ளது. மேலும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இதே நிலைமைதான் என்று கூறுகின்றனர்.
அ.தி.மு.க அரசின் பாதுகாப்பு லட்சணம் இதுதானா என்றும், அரசு துப்புரவு பணியாளர்களை தூய்மைப் பணியாளர்கள் என பெயர் மாற்றம் செய்தால் போதாது; அவர்கள் வழங்கவேண்டிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.