சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
உலகம் முழுவதும் 102,734 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகளவில் 1,699,631 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 376,327 ஆக உள்ளது. அதனால் உலகம் முழுவதும் கடுமையான ஊரடங்கு உத்தரவை பல நாடுகள் கடைபிடித்து வருகின்றனர். பல நாடுகள் அறிவித்த ஊரடங்கு முடிந்த பிறகு மீண்டும் ஊரடங்குக் உத்தரவை நீடித்துள்ளனர்.
இந்தியாவிலும் 21 நாள் முடக்கத்தை மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி அமல்படுத்தியது. இது, வரும் 14ம் தேதியுடன் முடிகிறது. முடக்கத்தை அறிவித்து 16 நாட்கள் கடந்த நிலையில், 21 நாள் முடக்கத்தை நீட்டிப்பதா?, வேண்டாமா? என்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், “உலகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காமல், ஊரடங்கை தளர்த்தினால் ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஆகிய நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு ஓரளவுக்கு குறைந்திருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உலக நாடுகள் கவனம் செலுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.