கொரானா தடுப்பு கால நிவாரண உதவிகளை உயர்த்தி வழங்க வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும். உணவுப் பொருள் கொள்முதல் மற்றும் விற்பனை அரசின் நேரடி பொறுப்பில் நடைபெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரானா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் முடக்கப்பட்டு இரு வாரங்கள் முடிந்துவிட்டன. ஆனாலும் நோய் தொற்று பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இதற்கிடையில், நடைமுறையில் இருந்து வரும் நாடு தழுவிய ஊரடங்கு நடவடிக்கை வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருமா? அல்லது மேலும் நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக மாநில முதலமைச்சர்கள் தெரிவித்த கருத்துகள் மூலம், நாடு முடக்கம் செய்யப்பட்ட நிலை மேலும் நீடிக்கும் என்ற கருத்து வலுப்பெறுகிறது.
ஆனால், மத்திய அரசின் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் நாடு முழுவதும் தொடரும் ஊரடங்கு தொடர்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அறிவிக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் குறிப்பிட்ட 14 பிரிவுகளில் தொழில்கள் இயங்கலாம் என்று உத்தரவிட்டார். பின்னர் அதனை உடனடியாக ரத்து செய்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அரசு ஒரு தெளிவான நிலை எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருப்பதை இது காட்டுகிறது.
கொரானா வைரஸ் நோய்த் தொற்று பரவி வருவதைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் ஒரு திட்டவட்டமான முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். கொரானா வைரஸ் நோய் தொற்று பரவி வருவதால் பொது சுகாதார அவசர நிலை நெருக்கடி ஏற்பட்டதை உணர்ந்த மத்திய அரசு இயற்கைப் பேரிடராக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரானா வைரஸ் நோய்த் தொற்றுக்கு 738 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 8 பேர் மரணமடைந்து விட்டனர். லட்சக்கணக்கில் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குற்றவியல் சட்டம் பிரிவு 144ன்படி தடையுத்தரவு நடைமுறையில் உள்ளது. தொற்று நோய்கள் சட்டம் 1897, பிரிவு 2ன் படி மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
இந்தத் தீவிரமான நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு அரசுக்கு, கொரானா நோய்த் தொற்று தடுப்பு கருவிகள் வாங்கவும், நோய் பரிசோதனை ஏற்பாடுகளை விரிவு படுத்தவும், தனிமைப்படுத்தி உள்ளவர்களுக்கு மருத்துவ உதவி செய்யவும் மத்திய அரசு ரூபாய் 12 ஆயிரத்து 200 கோடி, இயற்கை பேரிடர் கால நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் வெறும் ரூபாய் 510 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்து மத்திய அரசு தமிழக மக்களை வழக்கம் போல் வஞ்சித்து வருகிறது.
ஆட்கொல்லி நோய்த் தொற்று தடுப்புக்கால நிவாரணமாக சில உதவித் திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்து, அவைகளைச் செயல்படுத்தி வருகிறது. இந்த நிவாரண உதவிகள் பெரும்பான்மை மக்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை மாநில அரசு உணர வேண்டும்.
குறிப்பாக நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி வழங்கினாலும், வாரியங்களில் பதிவு செய்யாத பல்லாயிரம் குடும்பங்கள் நிலை குறித்து தமிழ்நாடு அரசு மனிதாபிமானத்துடன் பரிசீலிக்க வேண்டும். வாரியங்களில் பதிவு செய்யாத அமைப்புசாரத் தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
கடந்த இரு வாரங்களாக நீடிக்கும் ஊரடங்கும், கொரானா நோய் தொற்று பரவும் அபாயமும், அன்றாட வாழ்க்கைத் தேவைக்கான போராட்டமும் நடந்து வரும் நிலையில் பீதியும், பதற்றமுமான நிலை தொடர்கிறது. இந்த நிலையில், ஒத்தி வைக்கப்பட்டுள்ள 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது அவசியம் தானா? இதனை ரத்து செய்ய செய்வது மாணவர்கள் மத்தியில் அடுத்த நிலைக்கு செல்லும் தைரியத்தை தரும் என்பதால் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
எந்த உதவியும் கிடைக்காத நிலையில், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்கள் இல்லாத நிலையில் ஊரங்கு சட்டத்தை அத்துமீறி அவதிப்படுகிறார்கள் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த நெருக்கடியான நேரத்தில் வேலையிழந்த தொழிலாளர், விவசாயத் தொழிலாளர், அமைப்புசாராத் தொழிலாளர், புலம் பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் வழங்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் கோரி வரும் நிலையில் ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியதோடு நிறுத்திக் கொள்ளாமல் மேலும் நிவாரண நிதி உட்பட வாழ்வாதார உதவிகள் செய்திட தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டுகிறோம்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்து வந்த ‘நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி‘ அடுத்த 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்திருப்பது குறுகிய, கட்சிசார்ந்த கண்ணோட்டமாகும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொகுதிகளை புறக்கணிப்பது என்ற தீய நோக்கம் கொண்டதாகும்.
மக்களவைத் தொகுதி எல்லைக்குள் கொரானா வைரஸ் நோய் தொற்று தடுக்கப்பட தமிழ் நாட்டில் உள்ள மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை பெருமளவில் வழங்கியுள்ளனர்; வழங்கி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்புரிமையை பறிக்கும் ஜனநாயக விரோத செயலை கைவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி தொடர்ந்து ஒதுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இந்த இக்கட்டான நேரத்தில் வயல்களில் விளைந்த வாழை, பலா போன்ற பழவகைகளும், காய்கறிகளும் சந்தைக்கு எடுத்து செல்ல முடியாமல் வயலில் வீணாகி வருகின்றன. சந்தைக்கு வரும் பொருள்களை மிகக் குறைந்த விலையில் வாங்கும் வியாபாரிகள், பொது மக்களிடம் விற்கும்போது அதீத விலை உயர்த்தி விற்கிறார்கள் என்கிற வர்த்தக சூதாட்டத்தை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதும் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதும் அரசின் நேரடி பொறுப்பில் நடைபெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். கொரானா வைரஸ் நோய் தொற்று பரவி வரும் பேரபாயத்தை மக்கள் ஒன்றுபட்டு எதிர் கொள்ள மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவிகளை தாராளமாக வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.