இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக இந்தியாவில் லட்சக்கணக்காக தொழிலாளர்கள் வேலையின்றி தவித்துவருகின்றனர்.
அதனால் வேலையிழந்து தவித்து வரும் கூலித் தொழிலாளர்களுக்கும் ஆரவற்றவர்களுக்கும் பல்வேறு உதவிகளை அரசும் மற்றும் சில தொண்டு நிறுவனங்களும் செய்துவருகின்றன.
ஆனால், ஊரடங்கு காரணமாக சாலைகளில் சுற்றித் திரியும் நாய்கள், மாடுகள் போன்ற வாயில்லா ஜீவன்களை பெரும்பாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் பல இடங்களில் கால்நடைகள் பசியால் தவித்து வருகின்றன.
இதனைக் கண்ட சென்னையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சாலைகளில் திரியும் 200-க்கும் மேற்பட்ட வாயில்லா ஜீவன்களுக்கு தினமும் உணவு அளித்து வருகின்றார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு தங்களால் முடிந்த உணவுகளை அளித்துவருகின்றனர்.
இந்த நிலையில் ஊரடங்கால் மக்கள் வெளியே வராததால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சில போலிஸாரும் கால்நடைகளுக்கு உணவு வழங்கிவருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு கீரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராசு என்பவர் தனது சொந்த செலவில் உணவு வழங்கி வருகிறார்.
அப்படி உணவு அளிக்கச் செல்லும் இடங்களில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் உணவில்லாமல் தவிப்பதைக் கண்ட ராசு கால்நடைகளுக்குத் தண்ணீர், தெரு நாய்களுக்குப் பால், பிஸ்கட் வழங்கி பசியைப் போக்கி வருகின்றார்.
அதேபோல், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்புப் படை வீரர்கள் தெருநாய்களுக்கு பிஸ்கட் உள்ளிட்ட உணவுகளை வழங்கி தினமும் பசியை போக்கி வருகின்றனர்.
தெருநாய்களும் ஆர்வமுடனும், பாசத்துடனும் பிஸ்கட்டை சாப்பிடுகின்றன. இதன் காரணமாக தினமும் தீயணைப்படை வீரர்கள் தங்கள் பகுதிக்கு வந்ததுமே தெருநாய்கள் கூட்டமாக வந்து நிற்க தொடங்கி விடுகின்றனவாம்.
ஊரங்கை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதால் போலிஸார் மீது மக்கள் வெறுப்புடன் இருந்துவந்த நிலையில், தீயணைப்பு வீரர்களின் இந்த மனிதாபிமான செயலை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.