சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, பயணம் துவங்கியது என்ற தலைப்பில் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா வைரஸ் திருட்டுத்தனமாக நம்மைச் சூழ்ந்து கொண்டது. இந்த வைரஸை குறைத்து மதிப்பிட்டதால் பல வளர்ந்த நாடுகள் கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடமாட்டமும், தொடர்பும்தான் இந்த வைரஸ் பரவக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இருந்தால், நாம் மறைவாக இருப்பது தான் விவேகமானது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
லட்சுமண ரேகையை வரைந்து அதற்குள் அடைபட்டுக் கிடப்பதே அறிவுடைய செயல் எனக் கூறியுள்ள அவர், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். மரணத்தை நேருக்கு நேர் சந்திக்கவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
வெளியில் நடமாடுவதால் நமக்குத் தெரியாமல் கொரோனா வைரஸின் பலத்தை அதிகரிக்கிறோம் என எச்சரித்துள்ள அவர், தனித்திருந்து பேரழிவைத் தடுக்க வேண்டும் எனவும், தனித்திருப்பதை பாதுகாப்புக்கான பயிற்சி வாய்ப்பாகக் கருத வேண்டும் எனவும் மனதை அடக்கி வெற்றி காண்பதற்கு, வேறெந்த வெற்றியும் ஈடாகாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான போரில் அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பு கிடைத்தாலும், இனி வரும் காலங்கள் கடினமாகவே இருக்கும் என எச்சரித்துள்ள தலைமை நீதிபதி, கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் பாதி முடிந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறினாலும், மருந்து கண்டுபிடிப்பது என்பது இன்னும் சந்தேகமாகத்தான் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.