தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) கணக்கிலிருந்து 75 சதவீத தொகையை பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் வருமானமின்றி தொழிலாளர்கள் தவிப்பதைத் தடுக்க, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) விதிகளை தளர்த்தியுள்ளது.
மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “3 மாத அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி அல்லது இபிஎப் கணக்கில் உள்ள பணத்தில் 75 சதவீதம், இதில் எது குறைவோ அதை உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இது தொடர்பான விதிமுறை திருத்தம் மார்ச் 28, 2020 முதல் நடைமுறைக்கு வருகிறது. இது தொடர்பாக உறுப்பினர்களிடம் இருந்து வரும் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஓ) உத்தரவிட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன்கூட்டியே பணத்தைப் பெறுவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவசரத் தேவை இருக்கும் தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Step 1: UAN மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி EPFO போர்ட்டலில் உள்நுழைய வேண்டும். அதற்கான சுட்டி : unifiedportal-mem.epfindia.gov.in
Step 2: 'ஆன்லைன் சேவைகள்' பகுதிக்குச் சென்று 'Claim' பகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Step 3: பணத்தைப் பெறுவதற்கான வங்கிக் கணக்கு எண்ணை சரிபார்த்துக்கொள்ளவேண்டும்.
Step 4: காசோலை அல்லது பாஸ் புத்தகத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்றவேண்டும்.
Step 5: முன்கூட்டியே பணத்தைப் பெறுவதற்கான காரணம் கேட்கப்படும். அதற்கு, ‘outbreak of pandemic’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Step 6: ஆதார் அடிப்படையிலான OTP ஐ உருவாக்குங்கள். ‘Claim' செயலாக்கப்பட்டதும், அது ஒப்புதலுக்காக நிறுவனத்துக்கு அனுப்பப்படும்.