ரஜினியுடன் முதல் முதலாக ஏ.ஆர். முருகதாஸ் இணைந்து உருவாக்கி வரும் திரைப்படம் ‘தர்பார்’. இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், ஆனந்த் ராஜ், யோகி பாபு, நிவேதா தாமஸ் என பலர் நடிக்கின்றனர்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மும்பையில் தர்பார் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 80% படப்பிடிப்பும் மும்பையிலேயே நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது.
தர்பார் படத்தில் நடிக்கும் ரஜினியின் கெட்டப் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் இணையத்தில் கசிந்ததால், இயக்குநரும், தயாரிப்பாளரும் பேரதிர்ச்சிக்கு ஆளகினர்.
தொடர்ந்து தர்பார் பட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் லீக் ஆனதால், படப்பிடிப்பு தளத்துக்கு பணியாளர்கள் எவரும் கேமிராவோ, செல்போனோ பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டது. மேலும், படப்பிடிப்பின் போது எடுக்கப்படும் புகைப்படங்களை படக்குழுவிடம் ஒப்படைக்கும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தர்பார் ஷூட்டிங் மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்று வருகிறது. ஆகையால், ரஜினியை காணவும், படப்பிடிப்புகளை காணவும் மாணவர்கள் உள்ளே வந்ததால் படக்குழுவினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து, படக்குழுவினருக்கும் மாணவர்களுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டதால் செட்டில் பதற்றம் நிலவியது. பின்னர் ஆத்திரமடைந்த மாணவர்கள், கல்லூரியின் வராந்தாவில் இருந்து படக்குழு மீது கல் எறிந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசியுள்ளார் என்றும், படப்பிடிப்பு தளத்தை வேறு இடத்திற்கு மாற்ற இருப்பதாக அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.