குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள், எதிர்க்கட்சிகள், மாணவர்கள், சமூக அமைப்புகள் என பல தரப்பில் இருந்து போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் இந்த சட்டங்கள் குறித்து பிரதமராக உள்ள மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மாறி மாறி விளக்கம் கொடுத்து வந்தனர். இன்னொரு பக்கம், பா.ஜ.க.,வினர் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான சாமியார் ஜக்கி வாசுதேவ் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலானாலும், குடியுரிமை சட்டம் குறித்து ஜக்கி வாசுதேவ் பேசியதையும், மோடியும் அமித்ஷாவும் பேசியதையும் ஒன்றிணைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஜக்கி வாசுதேவ் பேசியதின் தகவல்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின் வருமாறு,
ஜக்கி பேசியது : பாகிஸ்தானில் இந்து முறைப்படி திருமணம் செய்வது சட்டவிரோதமானது.
சரிபார்க்கப்பட்ட உண்மை : பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 2017ம் ஆண்டே இந்து முறைப்படியான திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.
ஜக்கி பேசியது : குடியுரிமை திருத்தச் சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாட்டில் மதம் சார்ந்து துன்புறுத்தப்பட்டு அகதிகளாக இந்தியாவில் குடியேறுவோருக்கானது.
சரிபார்க்கப்பட்ட உண்மை : குடியுரிமை திருத்தச் சட்டத்தில் துன்புறுத்தப்பட்ட அகதிகளுக்கானது என குறிப்பிடவில்லை.
ஜக்கி பேசியது : CAAக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட வன்முறையாளர்களை கட்டுப்படுத்தவே போலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
சரிபார்க்கப்பட்ட உண்மை : அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலிஸ் தாமாக முன்வந்து அராஜகத்தில் ஈடுபட்ட நிகழ்வு வீடியோக்கள் இதுகாறும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஜக்கி பேசியது : தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது மிக முக்கியமானது. இதனை உலகின் அனைத்து நாடுகளும் நடைமுறைப்படுத்தியுள்ளது.
சரிபார்க்கப்பட்ட உண்மை : தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி கூறியிருந்தார்.
ஜக்கி பேசியது : ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவை தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு சான்றாகும்.
சரிபார்க்கப்பட்ட உண்மை : தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக இதுவரை எந்த விதிமுறையும் உருவாக்கவில்லை என்றும், ஆதார் முக்கிய சான்றிதழ் என வெளியான தகவலுக்கும் உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்திருந்தது.
அரசு என்ன நடைமுறையை பின்பற்றுகிறது என்று கூட தெரியாமல் என்ன செய்தாலும் பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸும் ஆதரவாக இருக்கும் என்ற நினைப்பில் வாய்க்கு வந்ததை எல்லாம் ஜக்கி வாசுதேவ் பேசியிருப்பது இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.