உலகம்

”சாப்பிடாமல் இறந்தால் சொர்க்கம் நிச்சயம்”.. பாதிரியாரை நம்பி பறிபோன 47 உயிர்கள்.. கென்யாவில் அதிர்ச்சி!

கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் கடலோர நகரமான மலிந்திக்கு அருகில் உள்ள ஷகாஹோலா என்னும் கிராமத்தில் குட் நியூஸ் இன்டர்நேஷ்னல் சர்ச் என்ற பெயரில் மகென்சி என்தெங்கே என்ற பாதிரியார் ஜெபகூடம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவர் பொதுமக்களிடம் கடவுளை காண்பதற்கு உணவு, தண்ணீர் கூட அருந்தாமல் காத்திருந்தால் கண்டிப்பாக கடவுளை அடையலாம் , இதன்மூலம் சொர்க்கத்துக்கும் செல்லமுடியும் என்று தொடர்ந்து கூறிவந்துள்ளார். இதனை உண்மை என அந்த கிராமத்தை சேர்ந்த பலர் நம்பியுள்ளனர்.

அதில் 15 பேர் இவரின் பேச்சை நம்பி அங்கிருந்த காட்டுக்குள் சென்று உணவு அருந்தாமல் இருந்துள்ளனர். இது குறித்து போலிஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் காட்டுக்குள் சென்றபோது அங்கு பல நாட்கள் சாப்பிடாமல் தண்ணீர் அருந்தாமல் பட்டினியாக இருந்த 15 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துவந்தார்.

ஆனால், வரும் வழியிலேயே பரிதாபமாக 4 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து அந்த பாதிரியாரை கைது செய்த போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியபோது இதுபோல பலர் இதற்கு முன்பே காட்டுக்குள் சென்று பட்டினி கிடைத்த உயிரை விட்ட அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.

அதன் பின்னர் காட்டுப் பகுதியில் போலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் குழந்தைகள் உள்ளிட்ட 47 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அதனைத் தொடந்து 800 ஏக்கர் பரப்பளவிலான காட்டுப் பகுதி சீல் வைக்கப்பட்டு, குற்றப் பகுதியாக கென்ய அரசு அறிவித்து அங்கு மேலும் சடலங்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 68 கோடி இழப்பு; 50 கோடி முறைகேடு.. அதிமுக ஆட்சியின் குளறுபடிகளை பட்டியலிட்ட CAG: கூண்டோடு சிக்கிய அதிமுக!