உலகம்

சிறுவனை உயிரோடு விழுங்கிய நீர்யானை.. துரிதமாக செயல்பட்ட நபரால் நடந்த அதிசயம் !

ஆப்ரிக்க நாடான உகாண்டாவின் கட்வே கபடோரா என்ற நகரம் எட்வர்ட் ஏரி கரையோரம் அமைந்துள்ளது. இந்த ஏரியில் நீர்யானை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் எரிக்கரையோரம் ஏராளமான குடியிருப்புகளும் அமைந்துள்ளன.

இந்த ஏரிக்கரையோரம் இகா பால் என்ற 2 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்துள்ளான். அப்போது திடீரென அங்கு வந்த நீர்யானை ஒன்று அந்த சிறுவனை விரட்டி பிடித்து தனது வாயில் போட்டு சிறுவனை விழுங்க முயன்றுள்ளது.

இதனை அந்த பகுதியில் இருந்த கிறிஸ்பாஸ் அகோன்சா என்ற நபர் பார்த்துள்ளார். உடனடியாக துரிதமாக செயல்பட்ட அவர், கையில் கிடைத்த கற்களை எல்லாம் எடுத்து அந்த நீர்யானையை நோக்கி வீசியுள்ளார். இதனால் அச்சமடைந்த நீர்யானை பாதி விழுங்கிய நிலையில், சிறுவனை தரையில் துப்பிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளது.

பின்னர் அந்த சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைஅக்காக மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏரிக்கரையில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் தாவரங்களை மட்டுமே உண்ணக்கூடிய விலங்கான நீர்யானைகள் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது

Also Read: பயிற்சியின்போது காயம்.. இறுதிப்போட்டியில் களமிறங்குவாரா மெஸ்ஸி ? வெளிவந்த புதிய தகவல் !