உலகம்

திடீரென தீப்பிடித்த ஓடும் பேருந்து.. உடல் கருகி 21 பேர் பலி.. உயிர்பிழைக்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!

பாகிஸ்தானில் தற்போது கனமழை பெய்ததால் அங்கிருக்கும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வரலாறு காணாத வெள்ளத்தால் அங்கிருக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த பேரழிவு வெள்ளத்தில் சிக்கி சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 12,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மழை பாதிப்பு காரணமாக அந்நாட்டில் இதுவரை 33 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80 பேருடன் தாது மாவட்டத்தில் உள்ள கைர்பூர் நாதன் ஷாவிலிருந்து கராச்சி நோக்கி நேற்று முன்தினம் பஸ் ஒன்று சென்றுள்ளது.

இந்த பேருந்து சிந்து மாகாணத்தில் உள்ள நூரிபாத் காவல் நிலையம் அருகே நேற்றிரவு வந்தபோது, ஏர் கண்டிஷன் இயந்திரம் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் இந்த தீ பேருந்து முழுக்க பரவியதால் பேருந்து தீ கொளுந்து விட்டு எரிந்துள்ளது.

இதில் சிலர் வெளியேறிய நிலையில், தீ விபத்தில் வெளியேற முடியாமல் 12 குழந்தைகள் உள்பட 21 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை அந்த பகுதியில வந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் பலர் தீவிர காயங்களோடு இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது,

இந்த விபத்தை அறிந்து போலிஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்ததால், அருகாமையில் இருந்த பல பேருந்து பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக அந்த பகுதியில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். இந்த விபத்துக்கு அந்நாட்டு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Also Read: 25 ரொட்டிகள் சாப்பிட்டதால் தூங்கி விட்டேன்.. பணி நேரத்தில் தூங்கிய போலிஸின் கடிதம் இணையத்தில் வைரல் !