உலகம்

இந்தியாவில் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம்.. கனடா மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அந்நாட்டு அரசு: என்ன காரணம்?

இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் வன்முறைகளும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்துள்ளது உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மீதான மதிப்பைக் குறைத்து வருகிறது.

மேலும், தற்போது மதமோதல்கள் அதிகரித்துள்ளது. இதனால் பல இடங்களில் வன்முறை போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுகிறது. இது இந்திய மக்களை மட்டுமல்லாது இந்தியாவிற்குச் சுற்றுலா வந்துள்ள வெளிநாட்டவர்களையும் அச்சப்பட வைத்துள்ளது.

கடந்த ஆண்டு பெண்கள் மீதான வன்முறை அதிகமாக இருந்தபோது, இந்தியாவில் அமெரிக்கப் பெண்கள் தனியாக எங்கும் செல்ல வேண்டாம் என அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தியிருந்தது.

தற்போது அமெரிக்காவைப் போன்றே, கனடா அரசும், இந்தியாவில் உள்ள தங்கள் மக்களை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்திய மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என்பதுதான் அந்த எச்சரிக்கை.

இது குறித்து கனடா அரசு இணையத்தில் பயண அறிவுறுத்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், கனடாவைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்குச் சென்றால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய 10 கிலோ மீட்டர் சுற்றுளவு உள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஏனென்றால் அப்பகுதியில் கண்ணி வெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்கள் இருக்கும் அபாயம் இருக்கிறது. எனவே இங்கு யாரும் செல்ல வேண்டாம்.

அதேபோல், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், அசாம், மணிப்பூர் லாடக் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் போதும் கவனமாக இருக்க வேண்டும். இப்பகுதியில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் நிலவுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: 15 நிமிடத்தில் பறந்து செல்லலாம்.. பெங்களூருவில் அறிமுகமாகும் ஹெலிகாப்டர் சேவை: கட்டணம் எவ்வளவு தெரியுமா?