உலகம்

நடு கடலில் கவிழ்ந்த படகு.. 73 அகதிகள் உயிரிழப்பு.. உயிர் பிழைக்க சென்றவர்கள் உயிரிழந்த சோகம் !

லிபியா,லெபனான்,சிரியா போன்ற நாடுகளில் உள்நாட்டு போர் மற்றும் பருவநிலை மாற்றத்தால் கடும் வறுமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த நாட்டில் பட்டினி சாவுகளும் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

இந்த நிலையில், லெபனான் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக அந்நாட்டின் பணமதிப்பு 90 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதனால் அங்கிருந்து மக்கள் தற்போது வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில், லெபனான் நாட்டிலிருந்து படகு மூலம் நேற்று முன்தினம் வெளிநாடுகளுக்கு சிலர் தப்ப முயன்றுள்ளனர்.

இவர்கள் சென்ற படகு சிரியாவின் டார்ட்டஸ் துறைமுகம் அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் திடீரென கவிழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடலோர காவல்படையினர் உடனடியாக விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தனர்.

அங்கு உயிருக்கு போராடிய 20 பேர்களை மட்டுமே அவர்களால் உயிருடன் மீட்கமுடிந்தது. இந்த விபத்தில், 73 பேர் உயிரிழந்ததாக சிரியா சுகாதாரத் துறை அமைச்சர் ஹசன் அல் கபாஷ் தெரிவித்துள்ளார். இந்தப் படகில் 100 முதல் 150 பேர் வரை இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

அதெல்லாம் படகு விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக லெபனான் அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்களை லெபனானுக்கு அனுப்பும் பணிகளை சிரியா தொடங்கியுள்ளதாகவும் விரைவில் சடலங்கள் அங்கு அனுப்பப்படும் என சிரியா அறிவித்துள்ளது. இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கொரோனா மரணம்: 18 மாதமாக கணவர் சடலத்துக்கு கங்கை நீரை தெளித்த மனைவி.. உ.பி-யில் அதிர்ச்சி !