உலகம்

”உதவிக்கரம் நீட்டக் கூட மறுப்பது நயவஞ்சகத்தின் உச்சம்” - ஒன்றிய அரசுக்கு தீக்கதிர் நாளேடு கண்டனம்!

"இலங்கை மக்களுக்கு தமிழக அரசு உதவிக்கரம் நீட்டும் போது அதனை வழங்க ஒன்றியஅரசு மறுப்பது நயவஞ்சகத்தின் உச்சம்" என்று தீக்கதிர் நாளேட்டில் ”அனுமதித்திடுக" என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து "தீக்கதிர்" நாளேட்டின் தலையங்கத்தின் சில பகுதிகள் வருமாறு:-

இலங்கையில் துன்புறும் சக மனிதர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்திட அனுமதிக்க வேண்டும். காலத்தே செய்தால்தான் அது உதவி என்பதைச் சரியாக சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இலங்கை அரசு தமிழர்கள் மீது பாரபட்சம் காட்டும் நிலையிலும், தமிழர்கள் மட்டுமின்றி சிங்களர்களின் துயரையும் சேர்த்துத் துடைக்கும் வகையில் தமிழக அரசு உதவிக்கரம் நீட்டுகிறது. ஆனால் ஒன்றிய மோடி அரசு எந்தவித மனிதாபிமானமுமின்றி உதவிகளைப் பெற்று அளித்திட மறுப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

முதல்வர் நேரில் வலியுறுத்தியும், நினைவூட்டல் கடிதம் எழுதியும் பதிலளிக்காமல் இருப்பது நயவஞ்சகத்தின் உச்சம். இனியும் தாமதிக்காமல், ரூ.123 கோடி மதிப்பிலான பால் பவுடர், அரிசி, மருந்து உள்ளிட்ட பொருட்களை உடனே இலங்கைக்கு அனுப்பிட அனுமதித்திட வேண்டும்.”

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: மனிதநேயத்திற்காக இணைந்த கட்சிகள்.. முதல்வரின் கோரிக்கையை ஏற்று தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு!