உலகம்

ஆப்கனில் 150 இந்தியர்கள் கடத்தப்பட்டார்களா? - மறுப்பு தெரிவிக்கும் தாலிபான்கள் : உண்மை நிலவரம் என்ன ?

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதும், தனது ஆட்சியைக் காப்பாற்ற முடியாமல் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். இந்நிலையில், ஆப்கானில் இருந்து தப்பிக்க அந்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் விமான நிலையங்களில் குவிந்துள்ளனர்.

விமான போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளுக்குச் செல்லமுடியாமல் அங்குள்ள மக்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரை தாலிபான்கள் கைது செய்து அச்சுறுத்தி வருவதாகவும் பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வழக்கம்போல் இல்லாமல், இம்முறை பல்வேறு வாக்குறுதிகளை தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆனால் அவை அனைத்து நிறைவேறுமா என்ற கேள்வி உலக மக்களுக்கு எழுந்துள்ள வேளையில், கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு தாலிபான்கள் தங்கள் அராஜக கொடுமைகளை தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர். அந்தவகையில் தாயகம் திரும்பும் வெளிநாட்டு மக்களை கடத்திச் சென்றதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த 150 பேரை தாலிபான்கள் கடத்திச் சென்றதாக இன்று காலையில் அங்கிருந்து வந்த செய்திகள் மூலம் தெரியவந்தது. அடுத்த சில நிமிடங்களிலேயே ஆப்கான் விமான நிலையம் சென்ற இந்தியர்கள் கடத்தப்பட்டதாக கூறப்படும் தகவலுக்கு தாலிபான்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தாலிபான் செய்தி தொடர்பாளர் அகமதுல்லா கூறுகையில், இந்தியர்கள் யாரையும் நாங்கள் கடத்தவில்லை. ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை ஆப்கான் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. மேலும் காபூல் விமான நிலையத்தில் இருந்தவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்க்கவே தாலிபான்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

தற்போது காபூல் விமான நிலையத்திற்கு அருகே உள்ள இடத்தில் இந்தியர்கள் அனைவரும் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன. இதனிடையே இன்றைய தினம் ஆப்கானில் இருந்து இந்திய விமானப்படை c-130j மூலம் 85 பேரும் தாயகம் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: ஆப்கானில் விமானத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த 3 பேர் - தப்பிக்க முயற்சித்த கால்பந்து வீரர் பலி!