உலகம்

“மாஸ்க் அணிய மறுத்த பழமைவாத நகரம்” : 40% மக்களுக்கு கொரோனா பாதிப்பு? - அதிர்ச்சித் தகவல்! #Covid19

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகளவில் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் நாட்டிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. 585 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலில் உள்ள தீவிர பழமைவாத யூத நகரமான நே பிரேக்கில், 2 லட்சம் பேர் வாழ்கின்றனர். அங்கு, தற்போது 40 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என அஞ்சப்படுவதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“இஸ்ரேலில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. ஆனால், நே பிரேக்கில் அப்படியில்லை. அந்நகரத்தைச் சேர்ந்தவர்கள் மூலமாக, கொரோனா தொற்று இஸ்ரேல் முழுவதும் பரவுபதை அனுமதிக்க முடியாது. அதனால், அந்நகரை முடக்குகிறோம்'” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இதையடுத்து நே பிரேக் நகரம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. நகரில் இருந்து மக்கள் வெளியேராமல் தடுக்க, நகரைச் சுற்றிலும் போலிஸாரும் இராணுவத்தினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நே பிரேக் நகரில் உள்ள மக்கள், கூட்டுக் குடும்பமாக நெருக்கடி மிகுந்த பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். மத நம்பிக்கை காரணமாக, இணையம் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடும் இவர்கள் மத்தியில் குறைவாகத்தான் இருக்கிறது. வெளியுலகச் செய்திகள் பெரிதாக அவர்களைச் சென்று சேர்வதில்லை.

இதனால், கொரோனா வைரஸை பொருட்படுத்தாமல் அனைவரும் கூடி பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் அணிய மறுக்கின்றனர்.

இஸ்ரேல் அரசின் கட்டுப்பாடுகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து பின்பற்ற மறுத்து வருவதால், கொரோனா தொற்று அவர்களிடையே மிக எளிதாகப் பரவும் என ஒட்டுமொத்த இஸ்ரேல் நாட்டினரும் அஞ்சி வருகின்றனர்.

அங்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டால் கிட்டத்தட்ட 75,000 பேர், அதாவது நகரின் 40% மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவரலாம் எனக் கூறப்படுகிறது. இது இஸ்ரேல் நாட்டவர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “10 லட்சம் பேரில் 38 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனையா?” - அ.தி.மு.க அரசை சாடும் காங்கிரஸ்!