உலகம்

“போர்க்கால நடவடிக்கையில் ட்ரம்ப் - அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது”: அதிர்ச்சி தகவல்!

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்தை நெருங்கியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30,934 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,63,875 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில், 1,24,471 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரேநாளில் 21,309 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுள்ளது. இதுவரை 2,227 பேர் பலியாகியுள்ளனர். வைரஸ் பாதிப்பின் மையப் புள்ளியாக அமெரிக்காவின் நியூயார்க் உள்ளது. அங்கு பாதிப்பு தீயாக பரவி வருவதால், அதிபர் டிரம்ப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளார்.

போர்காலங்களில் பயன்படுத்தும் சட்டமான பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை பயன்படுத்தி, கொரோனா சிகிச்சைக்கு அவசிய தேவையான வென்டிலேட்டர்களை விரைந்து தயாரிக்க நாட்டின் மிகப்பெரிய மோட்டார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்சுக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவைத் தொடர்ந்து, இத்தாலியில் பலி எண்ணிக்கை 10,023 ஆகவும் ஸ்பெயினில் 5,982, சீனாவில் 3,299, பிரான்சில் 2.314 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.