உலகம்

கோரத்தாண்டவமாடும் கொரோனா : ஜெர்மனியில் 70% மக்கள் பாதிப்படைய வாய்ப்பு- ஏஞ்சலா மெர்கல் ‘பகீர்’ எச்சரிக்கை!

சீனாவில் பிறந்த கொடிய நோயான கொரோனா உலகின் 100க்கும் மேலான நாடுகளில் பரவி மக்களின் உயிரைக் குடித்து வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி வருகின்றனர்.

உலகளவில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐரோப்பா கண்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 17 ஆயிரத்துக்கும் மேலானோர் கொரோனாவுக்கு ஆட்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐரோப்பாவில் இருந்து எவரும் வந்து போகாத வகையில் அடுத்த 30 நாட்களுக்கு அனைத்து போக்குவரத்து கதவுகளையும் மூடி உத்தரவிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

அமெரிக்காவிலும் கொரோனாவுக்கு 38 பேர் பலியாகியுள்ளனர். 1135 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கையில், நேற்று ஜெர்மனியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல், ஜெர்மனியின் 82.9 மில்லியன் மக்கள் தொகையில் 58 மில்லியன் மக்கள் அதாவது 60-70 சதவிகிதம் பேருக்கு கொரோனாவால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இதுவரையில் 2 பேர் மட்டுமே இந்த நோயால் உயிரிழந்திருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க நாம் முழு கவனத்தை செலுத்தவேண்டும் என ஏஞ்சலா மெர்கெல் கூறியுள்ளார். மேலும், ஜெர்மனியில் நடக்கவுள்ள அனைத்து கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதோடு, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

Also Read: கொரோனாவால் இந்தியாவில் முதல் பலி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு - கர்நாடகா, தெலங்கானா மக்களுக்கு எச்சரிக்கை!