உலகம்

போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கிடையே மோதல் : கொன்று உடல்களை பாலத்தில் தொங்கவிட்ட கொடூரம்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களின் வன்முறை சம்பவம் அதிகரித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு முதல் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் தங்களுக்குப் போட்டியாக இருக்கும் எதிர்த்தரப்பினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் போட்டியாளர்களைக் கொன்று சாலையோரம் குவிக்கும் வன்முறை சம்பவத்தை நிகழ்த்தி வந்தனர்.

அதேபோன்று மீண்டும் ஒரு சம்பவத்தை மெக்சிகோவின் மிக்கோகன் மாநிலத்தில் உருவாபன் என்ற நகரில் நடத்தியுள்ளார்கள். ஒரு பெரிய போதைக்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மற்றொரு தரப்பினரைக் கொன்றுள்ளனர். அவர்களில் 9 பேரின் சடலத்தை பாலத்தின் மீது தொங்கவிட்டுள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்களின் உடல்களை சாலையோரம் குவித்து வைத்துள்ளனர்.

இறந்தவர்களின் உடலில் துப்பாக்கிக் குண்டு துளைத்த அடையாளம் காணப்பட்டுள்ளது. பலரும் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டு அரை நிர்வாண நிலையில் கிடந்துள்ளனர். மேலும் அவர்கள் உடல்கள் கிடந்த பகுதியில் ‘ஜலிஸ்கோ’ என்ற போதைப் பொருள் கடத்தல் கும்பலின் பெயர்களை எழுதிவைத்துள்ளனர். ‘வயாகரா’ என்ற போதைக் கடத்தல் கும்பலுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 7 மாதங்களில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களின் வன்முறையைத் தடுக்க அரசும், காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.