Viral

உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்ட எலியின் உடல்.. கொன்றவர் மீது FIR.. உ.பியை விடாமல் துரத்தும் எலி பஞ்சாயத்து!

எலி வாலில் கல்லை கட்டி தண்ணீருக்குள் வீசியது தொடர்பான சம்பவத்தில் விலங்குகள் உரிமை ஆர்வலர் அளித்த புகாரையடுத்து இளைஞர் ஒருவர் மீது உத்தர பிரதேச போலீசார் FIR பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தர பிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த போலீசார், கஞ்சா வழக்கு ஒன்றில், பிடிபட்ட கஞ்சாவை சமர்ப்பிக்க கூறிய நீதிமன்றத்திடம் 581 கிலோ கஞ்சாவை எலி தின்று விட்டதாக தெரிவித்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் எலி தொடர்பான சம்பவம் உ.பி-யில் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், சதர் கோட்வாலி என்ற பகுதியில் உள்ள காந்தி மைதானம் அருகே சம்பவத்தன்று விலங்குகள் உரிமை ஆர்வலர் விக்கேந்திரன் என்பவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மனோஜ் குமார் என்ற இளைஞர் தனது கையில் எலியை வைத்து கொடுமை செய்துகொண்டிருந்தார்.

இதனை கண்ட அவர், உடனே இளைஞரிடம் சென்று இவ்வாறு துன்புறுத்தவேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். இதனை சற்றும் செவி கொடுத்து கேட்காத இளைஞர், அவர் முன்பே அந்த எலியை மேலும் துன்புறுத்தியுள்ளார். அதோடு அந்த எலி மீது கல்லை கட்டி அருகிலிருந்த கால்வாயில் தூக்கியெறிந்துள்ளார்.

இதனை கண்ட ஆர்வலரோ, உடனே கால்வாய்க்குள் குதித்து அந்த எலியை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் அது இறந்துவிட்டது. இதையடுத்து அதிரமடைந்த அந்த நபர், இறந்துபோன எலியுடன் அருகில் இருந்த காவல்நிலையத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட இளைஞர் மீது புகார் அளித்தார்.

மேலும் எலியை கொன்றதற்காக விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மனோஜ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதனையடுத்து மனோஜ் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல உயிரிழந்த எலி உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக துணைக் கண்காணிப்பாளர் கூறுகையில், "இந்த நிகழ்வு தொடர்பாக வந்த புகாரையடுத்து இளைஞரை உடனடியாக அழைத்து விசாரித்துள்ளோம். அதோடு இறந்த எளியேன் உடலை முதலில் அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் அங்கு போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால் பரேலியில் உள்ள ஐ.வி.ஆர்.ஐ.க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த குற்றம் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராது" என்றார். இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்தியாவில் எலியை கொள்வதற்கு பல மருந்துகள் அதிகாரபூர்வமாக விற்பனையாகும் நிலையில், எலி காலில் கல்லை கட்டி நீருக்குள் போட்டு கொன்ற இளைஞர் மீது புகார் கொடுத்துள்ளது அனைவர் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பெண்ணின் செருப்பை கவ்வி கொண்டு போன பாம்பு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ - வனத்துறை அதிகாரி கிண்டல் !