Viral

‘டிக்-டாக்’ படுத்தும்பாடு : நடுரோட்டில் பேருந்தை மறித்து ‘TIKTOK’ செய்த இளைஞரை கைது செய்த போலிஸார்!

உலகம் முழுவதும் ‘டிக்-டாக்’ மிகவும் பிரபலமான செயலியாக உள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி சிறியவர் முதல் பெரியவர்கள் வரை வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக இளம் வயதினர் டிக்-டாக் செயலியை பயன்படுத்தி நடனமாடுவதுடன், வசனங்கள் பேசி நடித்து வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால், ஒரு சிலரோ டிக்-டாக் வீடியோவிற்காக விபரீத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், கடலூரில் அரசு பேருந்தை மறித்து இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அதன் மீது படுத்துக் கொண்டு டிக்டாக்கில் வீடியோ எடுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அஜித் என்கிற இளைஞர் ஒருவர் கடந்த ஒருசில தினங்களுக்கு முன் கடலூர் திட்டக்குடி சாலையில் நின்றுகொண்டிருந்த பேருந்தை மறித்து, சாலையின் நடுவே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அதில் படுத்துக் கொண்டு ”என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...” என்ற பாடலுக்கு டிக்டாக் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. இதை பார்த்து வேறு யாரேனும் இது போல செய்யக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக கடலூர் காவல் கண்காணிப்பாளர் ஆபினவ், சம்பந்தப்பட்ட டிக்டாக் இளைஞரை பிடிக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து, இளைஞர் அஜீத்தை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இவர் இதற்கு முன்பும் இது போல டிக்-டாக் வீடியோவிற்காக பல விபரீத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.