Viral

கமகமக்கும் நெய்ச்சோறும் காரசார கறிக் குழம்பும்! உணவுப் பிரியர்களை கட்டியிழுக்கும் ‘பெட்டி சோறு’ உணவகம்!

தாம்பரம் கேம்ப் ரோடு சிக்னலுக்கு முன்னதாக இருக்கிறது ‘பெட்டி சோறு’ உணவகம். பெயரைப் போலவே பரிமாறும் விதத்திலும், சுவையிலும் வித்தியாசம் காட்டுகிறது ‘பெட்டி சோறு’.

காரைக்குடி - செட்டிநாட்டுப் பகுதிகளின் ஸ்பெஷல் சாப்பாடு இங்கே கிடைக்கிறது. கமகமக்கும் வாசத்தோடு கூடிய நெய்ச் சாப்பாடு ஓலைப்பெட்டியில் வைத்துத் தரப்படுகிறது. இதன் சுவையில் கரையாதோர் இருக்கமுடியாது என்கிற அளவுக்கு அனைவரையும் ஈர்க்கிறது.

சுவையான நெய்ச்சோறுடன் சிக்கன், மட்டன், காடை கிரேவி, வெஜ் கிரேவி போன்றவற்றில் விருப்பமானதைப் பெற்றுச் சாப்பிடலாம்.

ஓலைப்பெட்டியில் ஒரு லேயர் நெய்ச்சோறு, அடுத்து தால்ச்சா, பிறகு நெய்ச்சோறு, மேலே கிரேவி எனப் போட்டு சூடாகப் பெட்டியைக் கட்டிக் கொடுப்பார்கள். சூட்டில் ஓலையின் வாசம் பரவி சாப்பாட்டுக்கு வேறொரு சுவையைத் தருகிறது.

அங்கேயே சாப்பிடுவோருக்கு மண் தட்டில், இலைவைத்து சுவையாகப் பரிமாறப்படுகிறது. நின்றுகொண்டே சாப்பிடலாம். அதிகமானோர் ஓலைப்பெட்டியில் பார்சல் கட்டியே வாங்கிச் செல்கின்றனர். நெய்ச்சோற்றின் சூப்பரான சுவை விரும்பும் உணவுப் பிரியர்கள் எப்போதும் இந்த உணவகத்தில் நிறைந்திருக்கின்றனர்.

தினசரி பகல் 12 மணி முதல் 3 மணி வரையும், பின்னர் மாலை 7 மணி முதல் 10 மணி வரையும் ‘பெட்டி சோறு’ உணவகம் செயல்படும். செவ்வாய்க்கிழமை கடை விடுமுறை.