Viral

வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையிலேயே புகைபிடித்த ஆசிரியர் : வீடியோ வெளியானதை அடுத்து இடைநீக்கம்!

உத்தர பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் மஹ்முதாபாத் நகராட்சித் தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் பள்ளி நேரத்தில் வகுப்பறைக்குள் மாணவர்கள் முன்பே புகைபிடித்துள்ளார். புகைபிடித்தபின் பற்றவைத்த தீக்குச்சியை வகுப்பறையிலேயே விட்டெறிந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியரே இதுபோல நடந்தால் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும், இதனால் மாணவர்களுக்கும் சேர்ந்தே பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் அந்த ஆசிரியரை பள்ளியில் இருந்து நீக்கவேண்டும் எனவும் பலர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையிடம் புகார் அளித்தனர்.

இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி அஜய்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “வகுப்பறைக்குள் ஆசிரியர் ஒருவர் புகைபிடிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ பார்த்தபின் அந்த ஆசிரியர் குறித்து விசாரித்தோம். அவர் இதுபோல தொடர்ச்சியாக செய்து வந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஆசிரியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்த ஆசிரியரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளோம். இதுபோல மற்ற ஆசிரியர்கள் சமூகக் கேடான விஷயங்களை செய்யக்கூடாது என எச்சரித்துள்ளோம்” என அவர் கூறியுள்ளார்.

இதேபோல கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தர பிரதேச மாநிலம் பதாயூன் பூரில் உள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே மது அருந்தி, நடவடிக்கைக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.