Viral

”எங்ககிட்டயே டிக்கெட் கேக்குறியா?”- நடத்துநரை தாக்கி ரத்த காயம் ஏற்படுத்திய அராஜக போலிஸ் !

நாகர்கோவிலில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்து நெல்லையில் இருந்து குமுளி நோக்கி நேற்று மாலை சென்றுக்கொண்டிருந்தது. நெல்லை புது பஸ் ஸ்டாண்டில் ஏறிய இரண்டு ஆயுதப்படை காவலர்கள் தமிழரசனும், மகேஷும் பயணச்சீட்டு எடுக்காமல் இருந்துள்ளனர்.

அப்போது, பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதற்கான வாரண்டை காண்பிக்குமாறு நடத்துநர் ரமேஷ் கேட்டுள்ளார். அதற்கு ஆத்திரமடைந்த இரண்டு காவலர்களும், போலிஸிடமே வாரண்ட் கேட்பதா என்ற தொணியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நடத்துநர் ரமேஷை தகாத வார்த்தையில் திட்டியும், அவரையும் தாக்கவும் செய்துள்ளனர். இதனால் ரமேஷின் கண்ணில் அடிபட்டு ரத்தம் சிந்தியது.

இதனையடுத்து, பேருந்தை மூன்றடைப்பு காவல்நிலையத்துக்கு விடும்படி பயணிகளும், நடத்துநரும் கூறியதை அடுத்து, காவல்நிலையத்தில் ஆயுதப்படை காவலர்கள் பற்றி நடத்துநர் புகார் அளித்துள்ளார்.

பின்னர், ஆயுதப்படை காவலர்கள் தமிழரசன், மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்து உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பேருந்தில் நடத்துநருக்கும் ஆயுதப்படை காவலருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

போலிஸாரிடம், வாரண்ட் கேட்டதற்கு என்னை தாக்கி, போலிஸ்காரன் என்னவேனாலும் செய்வேன் என அவர்கள் கூறியதாக நடத்துநர் ரமேஷ் கண்ணில் ரத்தம் வடிய பேசிய வீடியோவும் வைரலாகியுள்ளது.

இதேபோல், சமீபத்தில் கடலூர் அருகே பயணச்சீட்டு வாங்க மறுத்த காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அரசு பேருந்து நடத்துநர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.