Viral

“சென்னையில் போலீஸ் ஜீப்பில் கள்ளக்காதல் ஜோடி மர்மச்சாவு”- பூச்சி மருந்து குடித்ததாக போலீசார் தகவல்!

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 42). இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவரின் மனைவியாகிய கவிதாமணி (வயது 32) என்பவருக்கும் இடையே அப்பாற்பட்ட உறவு ஏற்பட்டது.

கடந்த மாதம் 22ந் தேதி இந்த கள்ளக்காதல் ஜோடி புளியம்பட்டியில் இருந்து சென்னைக்கு ஓடிச் சென்று நெற்குன்றம் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்தது.

மேற்கண்ட இருவரையும் காணவில்லை என்று இருவரின் குடும்பத்தினரும் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து கள்ளக்காதல் ஜோடியை தேடி வந்தனர்.

இந்நிலையில், ஜெயக்குமார் தாம் தங்கி இருக்கும் இடத்தையும், புதிய தொடர்பு எண்ணையும் தனது நெருங்கிய நண்பர்கள் சிலருக்குத் தந்தார். அவர்களிடம் விசாரித்த போலீசார் ஜெயக்குமார்- கவிதாமணி ஜோடி இருக்கும் இடத்தை தெரிந்துகொண்டு நேற்று ( ஞாயிற்றுக் கிழமை) நெற்குன்றத்தில் வைத்து இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர்.

பின்னர் இருவரையும் போலீஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு சென்னையில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே வரும் வழியில் இந்த கள்ளக்காதல் ஜோடி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படும் போது, கள்ளக்காதல் ஜோடியை ஜீப்பில் ஏற்றி வரும் போது, பாதுகாப்பாக ஒரு ஆண் காவலரும், ஒரு பெண் காவலரும் அவர்களுக்கு பக்கத்தில் உட்கார்ந்து வந்தனர். வண்டி புறப்படத் தொடங்கிய சில கிலோமீட்டர் தூரத்தில் டீ குடிப்பதற்காக போலீசார் ஜீப்பில் இருந்து கீழே இறங்கி இருக்கின்றனர். அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு இருவரும் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்திருக்கின்றனர்.

டீ குடித்து விட்டு ஜீப்பிற்கு வந்த போலீசார் இருவரும் மயங்கிய நிலையில் இருந்ததையும், கவிதாமணி சேலையில் மறைத்து வைத்திருந்த 2 சிறிய பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்களையும் கண்டு திடுக்கிட்டுள்ளனர். பின்னர் இருவரையும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியிருக்கின்றனர். இருவரும், உறவினர்களுக்கு பயந்து, அவமானப்பட்டு விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.