Viral

ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் 9 வயது சிறுவன் பரிதாப பலி : பா.ஜ.க ஆளும் உ.பி.,யின் அவல நிலை !

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஷாஜகான்பூரைச் சேர்ந்த அஃப்ராஸ் என்ற 9 வயது சிறுவனுக்கு அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால், அந்த சிறுவன் உயிரிழந்தான். உயிரிழந்த மகனின் சடலத்தை தாயே தூக்கிச் செல்லும் அவலம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 27-ம் தேதி அதிகாலையில் சிறுவனுக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அருகில் உள்ள ஷாஜகான்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், “உடல்நிலை மோசமாக உள்ளது. எனவே லக்னோ அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள், இங்கு சிகிச்சை மேற்கொள்ள உரிய வசதிகள் இல்லை” என்று கூறி சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர்.

இதனையடுத்து சிறுவனின் தாயார், மருத்துவமனைக்குஅழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்துகொடுங்கள் என்று மருத்துவரிடம் கெஞ்சியுள்ளார். சிறுவனைத் தனியார் வாகனத்தில் அழைத்துச் செல்லுங்கள், ஆம்புலன்ஸ் இல்லை என்று கூறி அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸைக் கொடுக்க மறுத்துள்ளார்.

கையில் பணம் இல்லை என்று பெற்றோர்கள் சொல்லியும் மருத்துவர் கேட்கவில்லை என்றும், அந்த மருத்துவமனையில் 3 ஆம்புலன்ஸ் இருந்தபோதும் எங்களுக்குத் தர மறுத்தது ஏன் என்று தெரியவில்லை என அஃப்ராஸின் தந்தை வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தங்களுக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் தான், தனது மகன் உயிரிழந்ததாக சிறுவனின் தாயார் கதறி அழுகிறார்.

இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். மருத்துவமனை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். பா.ஜ.க ஆளும் உ.பி மாநிலத்தில் இதுபோன்ற அவலம் ஏற்படுவது முதன்முறை அல்ல. இருந்தும் அம்மாநில அரசு போதிய சுகாதார நடவடிக்கைகள் எடுக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.