Tamilnadu

ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!

மதுரையில் மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடிய பெண்ணின் கழுத்தைக் காவல்துறையினர் நெரித்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் இந்த கொடூர செயலுக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்"மதுரையில் 16 வயது பிளஸ் ஒன் மாணவன் தமிழ்ச்செல்வன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, அது ஒரு ஆணவக்கொலையாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுத்து வரும் நிலையில், நீதி கேட்டுப் போராடிய மாணவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிட்டுள்ள மூர்க்கத்தனமான வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

மாணவன் கொல்லப்பட்டு பத்து நாட்களுக்கு மேல் ஆன பிறகும், உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யாமல் காவல்துறை மௌனம் காப்பது கடும் கண்டனத்திற்குரியது.

யாரையோ காப்பாற்றுவதற்காகவும், தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவும், முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, நீதிகேட்டு ஜனநாயக முறையில் போராடும் எளிய மக்களின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெரிக்கிறது தவெக அரசு

நீதி கேட்டுப் போராடிய ஒரு பெண்ணின் முகத்தில் காவல்துறை தன் பூட்ஸ் காலை வைத்து நசுக்கி, தரையில் இழுத்துச் செல்லும் பதைபதைக்க வைக்கும் காட்சி தமிழ்நாட்டு வரலாற்றில் கரும்புள்ளியாகும்.

ஆணவப்படுகொலைக்கான அனைத்து சந்தேகங்களும் இந்த மரணத்தில் வெளிப்படையாகத் தெரிந்தும், தவெக அரசு இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயல்வது ஏன்? காவல்துறையைத் தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் விஜய், இந்த அப்பட்டமான காவல்துறை விதிமீறல்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்? கூட்டணிக் கட்சிகளும் அமைச்சர் பதவி சுகத்தில் கண்களை மூடிக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது” என தெரிவித்துள்ளது.

Also Read: த.வெ.க அரசு எந்தத் திசையில் செல்கிறது? : சர்ச்சை சுற்றறிக்கை - தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!