Tamilnadu
ஜப்பான் நிறுவனம், கலிஃபோர்னியா பல்கலை., பெர்க்லியோடு ஒப்பந்தம்… அரசின் அதிரடி மூவ் - முழு விவரம்!
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோசே நிறுவனம், ரூ.100 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 100 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மின்சார / மின்னணு இணைப்பிகள் (Electrical / Electronic Connectors) உற்பத்தித் திட்டம் அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (11.03.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோசே நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் 100 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்சார / மின்னணு இணைப்பிகள் (Electrical / Electronic Connectors) உற்பத்தித் திட்டம் அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டின் இளைஞர்கள் மற்றும் மகளிர்க்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மாநிலம் முழுவதும், சீரான, பரவலான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், மின்னணுவியல், மின் வாகனம் மற்றும் அது சார்ந்த துறைகளிலும், மின்னணுவியல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
அத்துடன் ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டிலும், தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நிலையை மேலும் மேம்படுத்திடும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹிரோசே நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோசே எலக்ட்ரிக் நிறுவனம், பலமுனை இணைப்பிகள் (Multi pole connectors). கோஆக்சியல் இணைப்பிகள் (Coaxial Connectors) மற்றும் பிற மின்னணு உபகரணங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. ஹிரோசே எலக்ட்ரிக் சென்னை பிரைவேட் லிமிடெட், இந்நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
இந்நிறுவனம், 100 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் மின்சார / மின்னணு இணைப்பிகள் உற்பத்தி ஆலை அமைக்க முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (11.3.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் மின்சார துறை வளர்ச்சி மற்றும் பசுமை எரிசக்தி பயன்பாட்டினை வலுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசிற்கும் அமெரிக்காவின் புகழ்பெற்ற கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் அமெரிக்காவின் பெர்க்லியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர்/ கல்வித் திட்டமிடல் மற்றும் சர்வதேச அலுவலர் ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், உலகளவில் எரிசக்தி ஆராய்ச்சி மற்றும் கொள்கை ஆய்வுகளில் முன்னணி கல்வி நிறுவனமாக திகழ்கிறது. பசுமை எரிசக்தி தொழில்நுட்பம், மின்சார சந்தை அமைப்பு, எரிசக்தி சேமிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் காலநிலை கொள்கைகள் போன்ற துறைகளில் சிறந்த அனுபவம் கொண்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாடு மின்சாரத் துறையின் எதிர்கால வளர்ச்சியினை கருத்தில் கொண்டு, அதிகரித்து வரும் மின்தேவையை குறைந்த செலவில் வலுவான மற்றும் நிலைத்தன்மை கொண்ட மின்சார அமைப்பிற்கு திட்டமிடல், புதுபிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்பு, மின்கட்டமைப்புக்கு ஏற்ப மின்சார சேமிப்பு அமைப்புகள் மற்றும் மேம்பாடு, மின்சார சந்தை வடிவமைப்பு மற்றும் ஒழுங்குமுறை கொள்கை;
மின்தொடரமைப்பு மற்றும் கட்டமைப்பை நவீனமயமாக்கல், காலநிலைக்கேற்ப நெகிழ்வு தன்மையுடன் கூடிய மின்சார அமைப்பு, தமிழ்நாடு மின்சார துறையில் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளித்தல் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் ஒத்துழைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்த ஒத்துழைப்பு மூலம் அறிவு பரிமாற்றம், கூட்டு ஆய்வு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டில் நவீன, வலுவான மற்றும் நிலைத்தன்மை கொண்ட மின்சார அமைப்பை உருவாக்க இயலும். மேலும், இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் இருதரப்பும் இணைந்து தீர்மானிக்கும் தனி ஒப்பந்தங்கள் மூலம் செயல்படுத்தப்படும்.
இந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டின் பசுமை எரிசக்தி வளர்ச்சிக்கும், மின்சார துறையின் திறன் மேம்பாடு மற்றும் நம்பகமான மின்விநியோகம் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்துவதில், முக்கிய பங்கு வகிக்கும்.
Also Read
-
ம.தி.மு.க-வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு... உதயசூரியன் சின்னத்தில் போட்டி - முழு விவரம் உள்ளே!
-
ஈரான்-இஸ்ரேல் போரால் சிக்கித் தவிக்கும் தமிழர்கள், உடனடி நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
தமிழ்நாட்டு விவசாயிகளின் உற்ற தோழனா மோடி அரசு? பாஜகவின் பொய்களும், அதன் உண்மை விளக்கமும் - முழு விவரம்!
-
சென்னையில் 700 அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மாளிகை, அச்சகம் ஆகியவை திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“உங்கள் கனவு நிறைவேறிவிட்டது! இனி மக்களின் கனவுகளை நிறைவேற்ற புறப்படுங்கள்!”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!