Tamilnadu

முதலமைச்சரின் அறிவிப்புக்கு பின்னர் அதிகமானோர் உறுப்பு தானம் செய்துள்ளார்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் "உறுப்பு தான தினம் - 2025" உறுப்பு கொடையாளர் குடும்பத்தினருக்கு சிறப்பு செய்தல் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு விழா பேருரையாற்றினார். அப்போது பேசிய அவர், "முத்தமிழறிஞர் கலைஞர் 2008 செப்டம்பர் 5ம் தேதி மூளை சாவடைந்தவர்களிடமிருந்து உடலுறுப்பு பெரும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் உருவானது.

2024 ஆண்டில் 268 உடல் உறுப்பு தானம் பெறப்பட்டுள்ளது. இதனை பாராட்டி ஒன்றிய அரசு சிறந்த மாநிலத்துக்கான விருதை தமிழ்நாட்டுக்கு அளித்துள்ளது. இந்த துறையில் இனிவரும் காலங்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களும் இந்தப் பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும். உடல் உறுப்பு தானம் செய்வதில் தொடர்ந்து முதலிடத்தில் தமிழ்நாடு இருப்பதை ஒன்றிய அமைச்சர் பாராட்டியுள்ளார். தொடர்ந்து எட்டு முறை தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்திற்கான விருதை பெற்றிருக்கிறது.

உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்புக்கு பிறகு இதுவரை 522 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளார்கள். 23,189 பேர் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் உடல் உறுப்பு தானம் அளித்தவர்களின் பெயர்கள் கொண்ட கல்வெட்டை வைக்கும் பணி அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும்"என்று கூறினார்.

Also Read: "தேனாம்பேட்டை To சைதாப்பேட்டை உயர் மட்ட மேம்பாலம் உரிய காலத்தில் நிறைவுபெறும்" - தமிழ்நாடு அரசு !