Tamilnadu

நள்ளிரவில் அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு : தனியார் பேருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலி எழுப்பான்களில் அளவீடு செய்யப்பட்டு அந்த ஒலி எழுப்பாண்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த பரிசோதனையில் நவீன கருவி மூலம் வாகனங்களின் ஒலி அளவீடு செய்யப்பட்டு அதிகமான ஒலி எழுப்பக்கூடிய வாகனங்களில் இருந்த ஒலி எழுப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம், ” தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் சார்பில் புதிய கருவிகள் வழங்கப்பட்டு உள்ளது. அதில் பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய அளவீடு கண்டறியும் கருவி இன்று முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தக் கருவி மூலம் ஒலி அளவு 90 என்பதை 100க்கு மேல் இருந்தால் அந்த ஒலி எழுப்பான்கள் பறிமுதல் செய்யப்படும். தமிழ்நாடு முழுவதும் 250 கருவி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக அதிக ஒலி எழுப்பியும், காற்று மாசு ஏற்படும் வகையில் செயல்பட்டால் அந்த ஒலி எழுப்பாண்கள் பறிமுதல் செய்யப்படும்.

ஏற்கனவே அதிக ஒலி எழுப்பக்கூடிய வாகனங்களில் இருந்து ஒலி எழுப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டாலும், தற்போது உரிய நவீன கருவி மூலம் அளவீடு செய்யப்பட்டு அது அகற்றப்பட உள்ளது. தொடர்ந்து இந்த அளவை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழ்நாட்டில் தி.மு.க.தான் வலுவான கட்சி : பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு!