Tamilnadu
40 ஆண்டுகால கோரிக்கை.. இராயபுரத்தில் புதிய இரயில்வே சுரங்க பாதை... திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (18.8.2025) இராயபுரம் மண்டலம் போஜராஜன் நகரில் 30.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாகனச் சுரங்க பாதையினை திறந்து வைத்து பார்வையிட்டார்.
வடசென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள போஜராஜன் நகர் மூன்று புறமும் இரயில்வே இருப்புப் பாதையினால் சூழப்பட்டுள்ளதால், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ரயில்வே சந்திப்பு கடவின் மூலமே வெளியே செல்ல முடியும். மேலும் அவசர காலங்களில் அவர்களால் வெளியே செல்வது மிகவும் சிரமமாக இருந்தது.
எனவே இங்கு வசிக்கும் பொதுமக்கள் உள்ளிட்ட வடசென்னைப் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, போஜராஜன் நகரில் வரையறுக்கப்பட்ட வாகன சுரங்கப்பாதை (Limited Use Subway) அமைக்கும் பணி கடந்த 2023 ஆம் ஆண்டு பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 30.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.
இச்சுரங்கப்பாதையின் நீளம் 207மீட்டர் (இரயில்வே பகுதி 37 மீட்டர் உட்பட), அகலம் 6 மீட்டர் ஆகும். மேலும், மழைக் காலங்களில் மழை நீரை வெளியேற்ற ஒரு நீர் சேகரிக்கும் கிணறு, 85HP திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மற்றும் ஒரு ஜெனரேட்டர் நிறுவப்பட்டுள்ளன.
இப்பணியின் மூலம் போஜராஜன் நகர், சீனிவாசன் நகர் மற்றும் மின்ட் மார்டன் சிட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் ஒரு லட்சம் பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.
மேலும், போஜராஜன் நகர் வாகனச் சுரங்கப்பாதையினையொட்டி 1.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் விளையாட்டுத் திடல், ரவுண்டானா பூங்கா மேம்பாட்டுப் பணிகள், ரவுண்டானாவைச் சுற்றிலும் நடைபாதை மற்றும் பொதுமக்கள் அமர்வதற்கான ஓய்வுக்கூடம், ஆகியவற்றையும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.மூர்த்தி, ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபினேசர், துணை மேயர் மு.மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., நிலைக் குழுத் தலைவர் (நகரமைப்பு), தா.இளைய அருணா, இராயபுரம் மண்டலக் குழுத் தலைவர் பி.ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் சு.கீதா சுரேஷ், பா.வேளாங்கண்ணி, அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Also Read
-
”தமிழ்நாட்டை வட்டமடிக்கும் பாஜக எனும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும்” : பரமக்குடியில் முதலமைச்சர் உரை!
-
“இனிவரும் 10 நாட்களும் மக்களோடு மக்களாக களப்பணி ஆற்ற வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
“NDA ஆட்சியில் நீதிக்கோ – நிர்வாகத்திற்கோ இடமே இருக்காது” : சிவகங்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”N.D.A. எனும் பேரிடர்.. டெல்லி அடிமை தான் பழனிசாமி!” புதுக்கோட்டையில் அனல் பறந்த முதலமைச்சரின் பேச்சு!
-
“234 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!