Tamilnadu

சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாகும் ரயில் பயணம் : ரயில்வே துறையை சிதைக்கும் ஒன்றிய அரசு!

இந்தியாவில் மிக முக்கிய போக்குவரத்துத் துறையாக இருக்கும் ரயில்வே துறையை ஒன்றிய பா.ஜ.க அரசு சிதைத்து வருகிறது. மேலும் சாதாரண மக்கள் ரயில்களை பயன்படுத்தவே கூடாது என்பதற்காக சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கையை ஒன்றிய அரசு குறைத்து வருகிறது.

அனைத்து நீண்ட தூர ரயில்களிலும் இரண்டாம் வகுப்பு சாதாரண பெட்டிகள், முன்பதிவில்லாத பெட்டிகள் குறைக்கப்பட்டு வருவதாக பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் நீண்ட தூரம் பயணிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் ரயில்களில் இடம் கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப் படுகிறார்கள். கூட்ட நெரிசல் காரணமாக முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணிகளிடையே அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனிடையே மூன்றாம் வகுப்பு ஏ.சி பெட்டிகளை தொடர்ந்து அதிகரிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த ரயில்வே கட்டண வருவாய் 80 ஆயிரம் கோடி. அதில் மூன்றாம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் மூலம் மட்டும் ரயில்வே துறைக்கு 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைப்பதுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு முன் (2019-20) மூன்றாம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் மூலம் கிடைத்த வருவாய் 12,370 கோடி. தற்போது அது (2024-25) 30,089 கோடியாக உயர்ந்துள்ளது.

இதனை அடுத்த நிதியாண்டில் 37,000 கோடியாக உயர்த்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏ.சி பெட்டிகளில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ரயில்வே துறை கூறியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன் ஏ.சி பெட்டியில் பயணிப்போர் 18 கோடியிலிருந்து தற்போது 38 கோடியாக உயர்ந்துள்ளது. மூன்றாம் வகுப்பு ஏ.சி பெட்டி பயணிகள் எண்ணிக்கை மட்டுமே 11 கோடியிலிருந்து 26 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சாதாரண வகுப்பு பெட்டிகளில் பயணிகள் எண்ணிக்கை 790 கோடியிலிருந்து 688 கோடியாக குறைந்துள்ளதாக ரயில்வே துறை கணக்குகள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக ரயில் பயணிகளின் எண்ணிக்கை 727 கோடியாக உள்ளது.

Also Read: இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர் போராட்டத்தை மாபெரும் எழுச்சியாக நடத்தவேண்டும் - எழிலரசன் MLA வேண்டுகோள்!