Tamilnadu

“அண்ணாமலையை கடைகோடி தொண்டனை வைத்தே வீழ்த்துவோம்...” - அமைச்சர் சேகர்பாபு சவால்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மக்கள் முதல்வரின் மனிதநேய விழா முதல் நிகழ்ச்சியாக பிப்ரவரி 20 ஆம் தேதியான இன்று தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி வரை 365 நாட்களும் துறைமுகம், திரு.வி.க நகர், அம்பத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் தொகுதிகள் என கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் அமுதக் கரங்கள் திட்டம் மூலம் தினம்தோறும் நாள் ஒன்றுக்கு 1000 முதல் 1200 பேருக்கு பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றி அழகன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது பிறந்த நாளை ஆடம்பரமாக இல்லாமல் மக்களுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என்று நல்வழிப்படுத்தி காட்டியுள்ளார்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் வாழ்வாதாரம் சிறக்க நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். அந்த வகையில் இன்று இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஆட்சி ஏற்பட்ட பின் இல்லாமை என்பது ஒருபுறம் இல்லாமல் போனது. மழலைச் செல்வங்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அளித்தவர் நம்முடைய முதலமைச்சர். ஒட்டுமொத்த தமிழகத்தின் அன்னதான பிரபு எங்கள் தமிழக முதல்வர் என்றால் அது மிகையாகாது.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் 3 கோடியே 50 லட்சம் பேர் அன்னதான திட்டத்தால் ஒரு ஆண்டிற்கு பயனடைந்து வருகின்றனர். ஆண்டுக்கு ரூ. 112 கோடி இந்த திட்டத்துக்கு மட்டும் செலவாகிறது. ஒருவேளை அன்னதான திட்டம் இந்த ஆட்சி ஏற்பட்ட பின் 27 கோவில்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 50 பேருக்கு என்று இருந்த அன்னதானத் திட்டத்தை பல இடங்களில் 100 பேருக்கு என்று மாற்றியமைத்து உள்ளோம். திருவிழாக்களில் இருநூறு என்ற அளவில் இருந்ததை 500 என்று எண்ணிக்கை அளவுகளை உயர்த்தி இருக்கிறோம்.

சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆறு தொகுதிகளில் சுழற்சி முறைகளில் இரண்டு இடங்களாக பிரித்து 500 பேருக்கு 500 பேருக்கு என்ற வகையில் உணவு வழங்கப்பட உள்ளது. நலத்திட்டங்கள் நடைபெறுவது நாளுக்கு நாள் திருக்கோவில்களில் பக்தர்கள் எண்ணிக்கை கூடுவதும் பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது, தேவார திருவாசகம் நடைபெறுவதும் எப்படி அண்ணாமலை போன்றவர்களுக்கு எப்படி வயிற்று எரிச்சலை கிளப்பாமல் இருக்கும்?

ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்தவர்களுக்கு அது முடியாத காரணத்தினால் இப்படி ஏதாவது பேசிக் கொண்டுதான் இருப்பார்கள் இது காய்ச்ச காய்ச்ச மெருகு ஏறும் இயக்கம். அடிக்க அடிக்க பந்து உயர பறக்கும். அதே போல தான் திமுகவை விமர்சனம் செய்தால் மேலும் வளர கூடிய இயக்கம். முதலில் அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் நிற்கட்டும் அப்படி நின்றால் அதே சட்டமன்றத் தொகுதியில் திமுகவின் கடைகோடி தொண்டனை நிறுத்தி அவரை வீழ்த்துவோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக வரட்டும் பார்க்கலாம்.

Also Read: PM SHRI நிதி குறித்து பொய் சொன்ன அண்ணாமலை : உண்மையை விளக்கிய TN Fact Check!