Tamilnadu

மாதம் ரூ.1000 பெற வேண்டுமா? : 10-ம் வகுப்புக்கு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு - விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 25ம் தேதி நடைபெறும் நிலையில், பள்ளி மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை நவ.30 முதல் டிச.9 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் 'முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு' நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 என ஊக்கத்தொகை தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2024-2025 கல்வியாண்டில் பயலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 25-ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை நவ.30 முதல் டிச.9 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பு வருமாறு :

அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு (TNCMTSE) - ஜனவரி 2025 செய்திக் குறிப்பு :

அரசுப் பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்ளுக்கான'தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு' 25.01.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 1000 மாணாக்கர்கள் (500மாணவர்கள் + 500 மாணவியர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டில் ரூ.10,000/- (ஒரு மாதத்திற்கு ரூ.1000/- என) வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறிவகையில் தேர்வு இருதாள்களாக நடத்தப்பெறும்.

முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும். இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும்.

முதல் தாள் காலை 10.00மணி முதல் 12.00 மணி வரையிலும் இரண்டாம் தாள் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 வரையிலும் நடைபெறும்.

படிவத்தினை 30.11.2024 முதல் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் 09.12.2024 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) சேர்த்து 09.12.2024 -க்குள் மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

Also Read: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : மூன்றாவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!