Tamilnadu
ஆன்லைனில் லட்சக்கணக்கான பணத்தை இழந்த இளைஞர்... வழிப்பறி திருடனாக மாறிய அவலம்... கைது செய்த போலீஸ்!
சென்னை தாம்பரம் சேலையூரில் உள்ள காமராஜபுரம் பகுதியில் சீதா என்ற 70 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் தனியாக சாலையில் செல்லும்போது இவரிடம் 2 பவுன் தங்க செயினை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றுள்ளார். இதையடுத்து இதுகுறித்து போலீசாரிடம் இவர் புகார் கொடுத்த நிலையில், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதே போல் கிழக்கு தாம்பரம் பகுதியில் வசித்து வரும் சுபா (49) என்ற பெண்ணிடமும் 5 பவுன் தங்க நகையை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றுள்ளார். இந்த 2 வழக்கையும் போலீசார் விசாரித்து வந்த நிலையில், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும்போது ஒரே நபர் என்று தெரியவந்தது. இதையடுத்து விசாரணையை துரிதப்படுத்திய போலீசார், அந்த நபரை கண்டறிந்தனர்.
வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர் கோவில்பட்டியை சேர்ந்த அருணாச்சலம் (27) என்பதும், தற்போது அவர் சென்னையில் மடிப்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து குற்றச்செயலில் ஈடுபட்ட இளைஞர் அருணாச்சலத்தை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் இன்ஜினியர் படித்து முடித்து வேலையில்லாமல் இருப்பதும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது தங்கை திருமணத்துக்காக வைத்திருந்த நகையை விற்று அந்த பணத்தை வைத்து ஆன்லைன் ட்ரேடிங் செய்ததும், மேலும் வெளியே இருந்து லட்சக்கணக்கில் கடன்கள் வாங்கி அந்த பணத்தையும் டிரேடிங் செய்து ஏமாந்தும் கண்டறியப்பட்டது.
சுமார் ரூ.15 லட்சம் வரை பணத்தை இழந்த அந்த நபர், அதனை ஈடுகட்ட எண்ணியுள்ளார். ஆனால் அவரிடம் சரியான வேலையில்லாத காரணத்தினால், வேறு வழி ஏதேனும் இருக்கிறதா என்று Youtube பார்த்துள்ளார். அப்போது அவருக்கு இந்த வழிப்பறி எண்ணம் தோன்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சில நாட்கள் குறிப்பிட்ட ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து நோட்டமிட்டு தங்க நகையை பறித்துள்ளார்.
பின்னர் அதனை தனது வீட்டில் தங்கையின் திருமணத்துக்கு கொடுத்துள்ளார். மேலும் சில நகையை அடகு வைத்து பணத்தை பெற்றுள்ளதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. தொடர்ந்து நகைகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வரும் 10-ம் தேதி குற்றம்சாட்டப்பட்ட நபரின் தங்கைக்கு திருமணமாகவுள்ள நிலையில், இது போன்ற சம்பவம் அந்த குடும்பத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வீடு புகுந்து செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கஞ்சா கும்பல் : திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்!
-
கானா பாடகர் வெட்டி கொலை : 7 பேர் கைது - தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்!
-
வாக்களித்த மக்களை வேட்டையாடும் வழக்கத்தை பிரதமர் மோடி : பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு முரசொலி கண்டனம்!
-
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வன்முறை! : அலட்சியத்தின் உச்சத்தில் த.வெ.க அரசு!
-
உபா சட்ட வழக்குகளிலும் ஜாமீன் வழங்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!