Tamilnadu

வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து பரவிய தவறான செய்தி : விளக்கம் அளித்த தமிழ்நாடு அரசு !

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப். 12 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் நேற்று முன்தினம் “தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி” என 2024 -25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று 2024-25ம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அந்த நிதிநிலை அறிக்கையில் 10 லட்சம் வேப்பமரக்கன்றுகள் வழங்க ரூ.2 கோடியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், அது குறித்து தவறாக புரிந்துகொள்ளப்பட்ட நிலையில், தவறான செய்தி ஒன்றை பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்டது. இந்த நிலையில், அதற்கு விளக்கம் அளித்து தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு,

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்:

வேப்பங்கன்றுகள் 10 ஆயிரம் அல்ல.. 10 லட்சம்!

பொய்ச்செய்தி

தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையில், 10,000 வேப்பங்கன்றுகளை உருவாக்க ரூ.2 கோடி செலவிடப்போவதாக மாநில அரசு தெரிவித்துள்ளதாகவும், வேப்பங்கன்றுகள் சாதாரணமாக வளரக்கூடியவை. அதற்காக 2 கோடி ரூபாய் நிதியைச் செலவழிப்பது தேவையற்றது என்றும் சிலர் கூறுவதாக பிபிசி குறிப்பிட்டுள்ளது.

உண்மை என்ன?

வேளாண் நிதிநிலை அறிக்கையில், "வேம்பினை பரவலாக்கம் செய்திடும் வகையில் 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள், வேளாண்காடுகள் திட்டத்தில் இலவசமாக விநியோகிக்கப்படும். இதற்கென 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசு 10,000 வேப்ப மரக்கன்றுகளுக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யவில்லை. 10 லட்சம் வேப்பமரக்கன்றுகளுக்குதான் ரூ.2 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

எனவே, இச்செய்தி தவறாக திரிக்கப்பட்டதாகும்" என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: பார்க்கிங் கட்டணத்தில் இரண்டு புதுமையான முறைகள் - அறிமுகப்படுத்தியது சென்னை மெட்ரோ நிறுவனம் !