Tamilnadu

சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொலை முயன்ற அதிமுக நிர்வாகி... கைது செய்து சிறையில் அடைத்த வேலூர் போலிஸ் !

வேலூர் மாவட்டம் பெருமுகை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு. சி.எம்.சி மருத்துவமனையில் அட்டெண்டராகப் பணிபுரிந்துவரும் இவர், சமூகப் பிரச்னைகளுக்காகச் சட்டப் போராட்டம் நடத்திவரும் சமூக ஆர்வலராகவும் இருக்கிறார். இவரது இந்த போராட்டம், சில சமூக விரோதிகளுக்கு பிடிக்காத காரணத்தினால், அடிக்கடி இவருக்கு கொலை மிரட்டல்களும் வந்துள்ளது. இதனால் இவர் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறார்.

இந்த சூழலில், கடந்த ஜனவரி 3, 2024 அன்று காலை தனது இரு சக்கர வாகனம் மூலம் சுரேஷ்பாபு வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று திடீரென அவரது வாகனத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சுரேஷ்பாபு ஹெல்மெட் அணிந்திருந்ததால், கை கால்களில் சிராய்ப்புக் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

சமூக ஆர்வலர் சுரேஷ்பாபு, அதிமுக நிர்வாகி ஸ்டான்லி ஜான்

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசில் சுரேஷ் பாபு புகார் அளித்த நிலையில், அதன்பேரில் வழக்கு பதிவுசெய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த கார் குறித்து விசாரிக்கையில், வெட்டுவானம் என்ற பகுதியை சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. தொடர்ந்து விசாரிக்கையில், அதிமுகவை சேர்ந்த நிர்வாகி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளித்தார்.

அதாவது, சம்பவத்தன்று வேலூர் மாவட்ட மாநகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டான்லி ஜான் என்பவர் பாபுவின் காரை எடுத்துக்கொண்டு, சுரேஷ் பாபுவை கொலை செய்ய முயன்றதாக பாபு வாக்குமூலம் அளித்தார். இதைத்தொடர்ந்து விபத்தாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டது.

மேலும் அதிமுக நிர்வாகியான ஸ்டான்லி ஜான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட அவர் தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாக இருந் ஜான், இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளரான ஸ்டாலின் ஜான் இதுபோன்ற கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ”சமூக அழுத்தங்களில் இருந்து நீதிபதிகள் விடுபட வேண்டும்” : தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் பேச்சு!