Tamilnadu

StartUp தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்: "இது நமது பாய்ச்சலுக்கு சான்று”- முதலமைச்சர் பெருமிதம்!

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சி கடுமையாக சரிவை சந்தித்தது. இதனால் ஏராளமான தொழில்முனைவோர் வேறு மாநிலங்களில் தங்கள் நிறுவனங்களைத் தொடங்கினர்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதும் தொழிற்துறை வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மேலும் தமிழகத்தில் நிறுவனங்களைத் தொடர முதலமைச்சரே நேரடியாக பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஆகட்ஸ் மாதம் கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு StartUp திருவிழா நடைபெற்றது. இதில் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டை உலகின் முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என உறுதியளித்தார்.

இந்த நிலையில், இந்திய அளவில் StartUp தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “StartUp தரவரிசைப் பட்டியலில், கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு, நமது திராவிட மாடல் ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது.

TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad நிகழ்வுகள் என ஒட்டுமொத்தமாக நமது அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 7600 StartUp நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022-ஆம் ஆண்டில் மட்டும் 2250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று.இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த அமைச்சர் தாமோ.அன்பரசன் அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்!” என்று கூறியுள்ளார்.

Also Read: களைகட்டிய உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி : 1200 காளைகள், 700 வீரர்கள் பங்கேற்பு !