Tamilnadu
“பொங்கலுக்கு முன்னதாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்”: முதலமைச்சரின் பொங்கல் பரிசு !
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக சார்பில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத் தொகைக்கான பட்ஜெட் அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்த திட்டமானது அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 1 கோடியே 15 இலட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, வரும் 10 ஆம் தேதியன்றே மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் 1.15 கோடி மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். இந்த நன்னாள் அனைத்துத் தொழில்களுக்கும், ஏன், மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நன்னாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2-1-2024 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட, ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும்.
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும் 10 ஆம் தேதியன்றே, மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் 1 கோடியே 15 இலட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
- 
	    
	      
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
 - 
	    
	      
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!
 - 
	    
	      
கோவை இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை : பதுங்கியிருந்த 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்!
 - 
	    
	      
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!
 - 
	    
	      
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!