Tamilnadu

“‘இன்னார்தான் படிக்க வேண்டும்’ என்ற நிலையை மாற்றியது திராவிட அரசு...” - முதலமைச்சர் பெருமிதம் !

திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு கல்வியில் அடைந்த, அடையும் முன்னேற்றங்களை குறிப்பிட்டு பெருமிதம் தெரிவித்தார். மேலும் கல்வித் துறையில் சமூகநீதிப் புரட்சியை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். இதுகுறித்து பட்டியலிட்டு அவர் பேசியது பின்வருமாறு :

"நமது திராவிட மாடல் அரசு, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் கல்லூரிக் கல்வி, அனைவருக்கும் ஆராய்ச்சிக் கல்வி என்ற இலக்கோடுதான் சமூகநீதிப் புரட்சியை கல்வித் துறையில் நடத்தி வருகிறது. "இன்னார்தான் படிக்க வேண்டும்" என்று இருந்த நிலையை மாற்றி, அனைவருக்கும் அனைத்துவிதமான வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறோம்.

❖ தமிழ்நாட்டு மாணவர்களை - படிப்பிலும், வாழ்க்கையிலும் வெற்றியாளராக்குவதற்கு "நான் முதல்வன்" திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

❖ உயர்கல்வி மாணவர்களின் சிந்தனைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், "CM Research Grant Scheme",

❖ உயர்கல்வி மாணவர்களின் சிந்தனைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், "CM Fellowship Program" ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

❖ பெண்கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு "மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்" எனும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரிக்குள் நுழையும் 3 லட்சத்து 45 ஆயிரத்து 362 மாணவியருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

❖ தமிழ்நாடு மாணவர்கள் போட்டித் தேர்வுகள், ஆட்சிப் பணித் தேர்வுகள், திறன்சார்ந்த தேர்வுகளுக்கு தயார் செய்யும்பொருட்டு மதுரையில் "கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம்" அமைக்கப்பட்டிருக்கிறது.

❖ எனது கனவுத் திட்டமான, ‘நான் முதல்வன்‘ திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளில் 29 லட்சம் மாணவர்களுக்கும், 32 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

❖ ஒரு வருடத்தில், ஒரு லட்சத்து 40 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு

❖ 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி, அனைத்து தரப்பு மாணவர்களும் தொழிற்கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

❖ 2021-22, 2022-23, 2023-24 ஆகிய மூன்று கல்வி ஆண்டுகளில் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் 28 ஆயிரத்து 749 மாணவர்கள் பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டம், மீன்வளம் மற்றும் கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர்ந்துள்ளார்கள். இவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், பேருந்துக் கட்டணம் அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டு 482 கோடி ரூபாய் செலவிடுகிறது.

இது எல்லாமே தமிழ்நாட்டின் மாணவர் சக்தியை அடுத்தகட்டத்துக்கு வளர்த்தெடுக்கும் முயற்சிகள். இன்றைக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம், உலகப் பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலிலும், தேசிய தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.

அப்படிப்பட்ட சிறப்புமிக்க இந்தப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சிலை, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறைகள், தமிழ் மையம் ஆகிய அனைத்தையும் தொடங்கியது நம்முடைய திராவிட மாடல் அரசுதான் என்பதை பெருமையோடு குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன்."

Also Read: “உயர்கல்வியின் பூங்காவாக தமிழ்நாடு திகழ்கிறது”: பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் உரை!