Tamilnadu

விநாயகர் சதுர்த்தி விழா.. சிலைவைக்க செய்ய வேண்டியவை? செய்யக்கூடாதவை என்ன? : வழிகாட்டு நெறிமுறைகள்!

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகத்திற்கு நீண்ட கால பாரம்பரியம் உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவின் போது சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும், மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிலைகளை கரைக்குமாறு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா - செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது:-

செய்ய வேண்டியவை:

1. சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளைப் பயன்படுத்துங்கள்.

2. சிலைகள் மற்றும் பந்தல்களை அலங்கரிப்பதற்கு, சுற்றுசூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

3. சிலைகளின் மேல்பூச்சு/ அலங்காரத்திற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, இயற்கையாக மக்கக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்துங்கள்.

4. சுற்றுசூழலுக்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜைக்கு பயன்படுத்தவும்.

5. மீண்டும் உபயோகிக்க கூடிய அலங்கார துணிகளையே அலங்காரத்திற்கு பயன்படுத்தவும்.

6. பிரசாத விநியோகத்திற்கு மக்கும் / மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் பாத்திரங்களை பயன்படுத்தவும்.

7. பொறுப்புடன் குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்துங்கள்.

8. அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்.

9. எல்.இ.டி. பல்புகள் போன்ற சுற்றுசூழலுக்கு உகந்த விளக்குகளை பயன்படுத்தவும்.

10. அலங்கார பொருட்களை பயன்படுத்தி தூக்கி எறியாமல் முடிந்த அளவு சேமித்து மீண்டும் பயன்படுத்தவும்.

செய்யக்கூடாதவை:-

1. பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) சிலைகளைப் பயன்படுத்த வேண்டாம்.

2.சிலைகளை அலங்கரிப்பதற்கு, சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும், ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் இரசாயனப் பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்த வேண்டாம்.

3.சிலைகளின் மேல்பூச்சு/ அலங்காரத்திற்கு நச்சுத்தன்மையுள்ள மற்றும் மக்கும் தன்மையற்ற இரசாயன சாயங்கள் / எண்ணெய் வண்ணப்பூச்சுகளை பயன்படுத்த வேண்டாம்.

4.சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும், ஒருமுறை உபயோகித்து

தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலாலான பொருட்களை பூஜைக்கு எவ்வகையிலும் பயன்படுத்த வேண்டாம்.

5.வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட மற்றும் ஒருமுறையே உபயோகித்து தூக்கியெறிய கூடிய அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.

6.பண்டிகையின் போது ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியக் கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழல்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

7.குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்று கொட்ட வேண்டாம்.

8.அனுமதி இல்லாத நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க வேண்டாம்.

9.ஃபிலமென்ட் பல்புகளை அலங்கார விளக்குகளாக பயன்படுத்த வேண்டாம்.

10. ஒருமுறையே பயன்படுத்தக்கூடிய அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.

Also Read: டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்ன ? அதை தடுக்கும் வழிமுறைகள் என்ன ? - நிபுணர்கள் சொல்லும் தகவல் !