Tamilnadu

அதிவேகமாக வந்த கார்.. நேருக்கு நேர் லாரி மேல் மோதிய சோகம்.. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 3 இளைஞர்கள் !

திருவண்ணாமலை - பெங்களூரு புதிய பைபாஸ் சாலையில் திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதே சாலையில் திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி கார் ஒன்று வந்துகொண்டிருந்தது.

இந்த கார் மற்றும் லாரி ஆகியவை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் தோக்கவாடி அருகே வந்தபோது நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த சம்பவத்தில் காரின் முன்பகுதி நொறுங்கிய நிலையில், காரில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து அந்த சாலையில் சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்த நிலையில், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்தவர்களின் சடலத்தை மீது செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் மழை பெய்து வந்ததால் அதன் காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது, காரில் பயணம் செய்தவர்கள் தூக்க கலக்கத்தில் எதிரே வந்த லாரி மீது மோதியுள்ளார்களா என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்ற்னர்.

இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் பின்னர் போலீசாரின் முயற்சி காரணமாக போக்குவரத்து நெரிசல் சீரானது. சரக்கு லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரில் சென்ற மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.