Tamilnadu

இந்தியாவிலேயே முதல்முறை.. பெண் கைதிகளால் இயக்கப்படும் பெட்ரோல் பங்க்: அசத்தும் தமிழ்நாடு அரசு!

இந்தியாவிலேயே முதல் முறையாக தண்டனைப் பெற்று சிறை கைதிகளாக உள்ள பெண்களால் இயங்கப்படும் பெட்ரோல் பங்கைப் புழல் - அம்பத்தூர் நெடுஞ்சாலையில் சிறைத் துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார் .இந்நிகழ்ச்சியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையைத் தலைமை இயக்குநர் அமீர் பூஜாரி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, "தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மற்றும் இந்தியன் ஆயின் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் இணைந்து ஐந்து இடங்களில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறது.

ஆறாவது இடமாகப் புழல் மகளிர் சிறையில் உள்ள பெண் சிறைவாசிகள் முழுமையாக நடத்தக்கூடிய பெட்ரோல் பங்க் இன்று திறக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாகப் பெண் சிறைவாசிகளால் நடத்தப்படும் முதலாவது பெட்ரோல் பங்க் இது.

தெலங்கானாவில் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே சென்ற சிறைவாசிகளால் பெட்ரோல் பங்க் நடத்தப்படுகின்றது. ஆனால் சிறையில் இருக்கக்கூடிய பெண் சிறைவாசிகளுக்காக நடத்தப்படுகின்ற முதலாவது பெட்ரோல் பங்க். இது திராவிட மாடல் ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக விலகுகிறது.

இதில் பணியாற்றும் பெண் சிறைவாசிகளுக்கு தற்போது மாதம் ரூ.6000 அவர்களது குடும்பத்திற்கு அனுப்பப்படும். விரைவில் இதுரூ.10 ஆயிரமாக மாற்றப்படும். சிறையிலிருந்தால் கூட அவர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்குத் தேவையான செலவுகளுக்குப் பணத்தை அனுப்பக்கூடிய வாய்ப்பை தமிழ்நாடு முதலமைச்சர் உருவாக்கித் தந்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.

Also Read: மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் Sansad TV-க்கு வெட்கமாக இல்லையா?.. இந்தியா கூட்டணி கடும் கண்டனம்!