Tamilnadu

லேப்டாப் பையுடன் பணத்தை தொலைத்த நபர்.. 3 மணி நேரத்தில் மீட்டு கொடுத்த போலிஸ் - குவியும் பாராட்டு !

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர் ஆவுடையப்பன். கோவில்பட்டியில் எலக்ட்ரிக் பைக் விற்பனையகம் நடத்தி வரும் இவர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று எலக்ட்ரிக் பைக்களை விற்பனை செய்து வருகிறார். அந்த வகையில் சம்பவத்தன்று திருச்செந்தூர் பகுதிக்கு எலக்ட்ரிக் பைக் விற்பனை செய்ய வந்துள்ளார்.

அப்போது அந்த பைக்கை விற்று அதில் பெற்ற ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை தனது பையில் வைத்து, ஒரு லேப்டாப்பையும் கொண்டு சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்றபோது திடீரென அவரது பை காணாமல் போயுள்ளது. இதனால் பதறி போன அவர், சுற்றிலும் தேடி பார்த்துள்ளார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை என்பதால் உடனடியாக திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் அவர் தெரிவித்த இடங்களில் எல்லாம் தேட ஆரம்பித்தனர். அப்போது திருச்செந்தூர் மார்க்கெட் அருகில் வியாபாரி ஒருவர் பை ஒன்று கீழே கிடந்ததாக கூறி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். தொடர்ந்து அந்த பையை சோதனை செய்த அதிகாரிகள் அதில் பணம் மற்றும் லேப்டாப் இருப்பதை அறிந்தனர்.

இதையடுத்து திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்த ராஜ் ஆணைப்படி ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் போலீசார் மீட்ட பணம் அடங்கிய பையை காவல்நிலையம் எடுத்து சென்று பறிகொடுத்த சங்கர் ஆவுடையப்பனிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். தொடர்ந்து தனது பணம் அடங்கிய பையை விரைவாக செயல்பட்டு பத்திரமாக கண்டுபிடித்து கொடுத்த காவல் துறைக்கு சங்கர் ஆவுடையப்பன் நன்றி தெரிவித்தார்.

தூத்துக்குடியில் எலக்ட்ரிக் பைக் டீலர் தவறவிட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை 3 மணி நேரத்தில் மீட்டு கொடுத்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Also Read: புதுச்சேரி பா.ஜ.க பிரமுகர் கொலை வழக்கு : கைதான 14 பேர் மீதும் பாய்ந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் !